“என்னய்யா வேலை செஞ்சீங்க”.. பார்த்ததுமே டென்ஷன் ஆன அமைச்சர் நாசர்.. காரை விட்டே இறங்காமல் ரிட்டர்ன்!
திருவள்ளூர் : திருவள்ளூரில் அமைச்சர் நாசர் மருத்துவ முகாமை தொடங்கி வைக்க வந்தபோது, பொதுமக்கள் யாரும் இல்லாததால், கோபமடைந்து அதிகாரிகள், கவுன்சிலர்களை அழைத்து காட்டமாக திட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த மருத்துவ முகாமிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் வந்திருந்தாலும், பொதுமக்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், இந்த மருத்துவ முகாமை தொடங்கி வைக்க அங்கு வந்த நிலையில், அமைச்சர் வருகையின் போது, மருத்துவர்கள், செவிலியர்கள் மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அமைச்சர் நாசர், காரில் இருந்தபடியே இந்த மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள், திமுக கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்து காட்டமாகப் பேசியதோடு, மருத்துவ முகாமை ரத்து செய்துவிடுங்கள் என்று கூறிவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுள்ளார்.
மருத்துவ முகாமிற்கு வந்த அமைச்சர் நாசர், பொதுமக்கள் யாரும் வராததால், சிறப்பு முகாமை ரத்து செய்துவிட்டு காரை விட்டே இறங்காமல் அப்படியே திரும்பிச் சென்ற நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மருத்துவ முகாமிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என 50க்கும் மேற்பட்டோர், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் வந்திருந்த போதிலும், முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் பொதுமக்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications