“துரோகிக்கு கவுண்ட் டவுன் ஆரம்பம்.. பழிக்குப் பழி” பேஸ்புக்கில் பதிவிட்ட ஊராட்சி தலைவரின் கணவர் கைது
திருவள்ளூர்: ஃபேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட புகாரில் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் அருகே கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்திபனின் அண்ணன், ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பகிரங்க கொலை மிரட்டல் பதிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்திபன். அதிமுக பிரமுகரான இவர், பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பு வகித்தவர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பார்த்திபன் கடந்த 2023 ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று தனது வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரிமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் முக்கிய பிரமுகராக இருந்த பார்த்திபன் கொலை சம்பவத்தால் பதற்றம் நிலவியதால் அப்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செம்மரக் கடத்தலில் முக்கியப் புள்ளியாக இருந்த பார்த்திபன், செங்குன்றம் ஏரியாவில் முக்கிய புள்ளியாக வலம் வந்தவர். இவர்மீது ஆந்திராவில் செம்மரக் கடத்தல் தொடர்பான 18 வழக்குகளும், தமிழ்நாட்டில் இரண்டு கொலை முயற்சி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டல், மோசடி உள்ளிட்ட ஆறு வழக்குகளும் இருந்தன.
கொலை செய்யப்பட்ட பார்த்திபனின் அண்ணன் நடராஜனின் மனைவி ஜெயலட்சுமி தற்போது பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், பார்த்திபனின் அண்ணன் நடராஜன் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது தம்பி கொலை தொடர்பாக பழிக்குப் பழி வாங்கப்படும் என்ற வகையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் நடராஜன். இதுதொடர்பாக புகார் வந்த நிலையில், ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் மோதல் ஏற்படும் வகையில் நடராஜன் பதிவிட்டதாக போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தனது தம்பி கொலைக்கு காரணமானவர்கள் வீட்டில், அதை நடத்திக் காட்டுவோம், துரோகிக்கு கவுண்டவுன் ஆரம்பம் என நடராஜன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்ட நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications