புயல்-மழையிலும் அசையாத பிடிஓ.. பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் தூக்கியடிப்பு.. கலெக்டர் உத்தரவு
திருவள்ளூர்: மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத புகாரில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த 4 மாவட்டங்களில் கடந்த 3 மற்றும் 4 ம் தேதிளில் விடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் சென்னை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. மாறாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டன. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த மிக்ஜாம் புயல் கடந்த 5ம் தேதி ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் மழை என்பது நின்றது. இதையடுத்து மழை வெள்ளத்தை அகற்றும் பணி என்பது வேகமாக தொடங்கி நடந்தது. அரசு பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்கள் இந்த வேலைகளை செய்தனர். மோட்டார்கள் மூலம் வெள்ளம் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் தான் திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் மழை நீர் என்பது சரியாக வெளியேற்றப்படவில்லை. மழை நின்று ஒருவாரமாகியும் கூட வெள்ளத்தை அகற்ற அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
குறிப்பாக காட்டுப்பாக்கம், நசரத்பேட்டை உள்பட பல இடங்களில் வெள்ளம் வடியாமல் தேங்கி இருந்தது. இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் மக்கள் புகார் அளித்தனர். இந்த புகார் பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பூந்தமல்லி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் பணியில் அலட்சியமாக இருந்தது தெரியவந்தது. அவர் மழை வெள்ளத்தை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்டாலினை திருத்தணிக்கு பணிஇடமாற்றம் செய்து திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் ஸ்டாலினுக்கு பதில் திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் பூந்தமல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications