சென்னை உயர்நீதிமன்ற பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு... மர்ம நபர்கள் கைவரிசை... திருவள்ளூரில் ஷாக்!
திருவள்ளூர் : திருவள்ளூரில் உள்ள உணவகத்தில் உணவருந்திவிட்டு சாலை கடக்க முயன்ற சென்னை உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் 3 சவரன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
திருவள்ளூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் வழிபறி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. தற்போது, உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி புரிந்து வரும் உமாதேவி என்பவர், தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் முடிந்ததும், திருவள்ளூர் வழியாக சென்னை வந்துள்ளார் . திருவள்ளூர் சி.வி.என் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து, தனது காருக்கு செல்வதற்காக சாலையை கடக்க உமாதேவி முயன்றார். அப்போது, அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். அப்போது உமாதேவி சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டதால் செயின் இரண்டாக அறுந்ததில் சுமார் 3 சவரனை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

இந்த சம்பவத்தில் உமாதேவி நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் நகர காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் தனியார் உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு வந்த உயர்நீதிமன்ற பெண் ஊழியரின் கழுத்தில் இருந்த நகை பறிக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால், காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications