விஜயுடன் கூட்டணியா? இப்படியெல்லாம் கேட்காதீங்க.. கேள்வி கேட்டதுமே சூடான பிரேமலதா! பதில் என்ன பாருங்க
திருவள்ளூர்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்வி கேட்டதும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சூடாக பதிலளித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக நடிகர் விஜய் உள்ளார். முன்னதாக சினிமாவில் நடிகர் விஜயின் தொடக்க காலம் என்பது சரியாக அமையாமல் இருந்தது. இதையடுத்து தந்தையும், இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் செந்தூரபாண்டி படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக நடிகர் விஜயை நடிக்க வைத்தார்.

அப்போது நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கொடிக்கட்டி பறந்தார். விஜயகாந்த் நடித்த நிலையில் விஜயும் படத்தில் அசத்தியிருப்பார். இந்த படம் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடிகர் விஜயின் கிராப் என்பது திரைத்துறையில் ஏற தொடங்கியது. இப்படி நடிகர் விஜயின் திரைப்பயணத்துக்கு விஜயகாந்த் உதவி செய்தார்.
இந்நிலையில் தான் நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைந்துவிட்டார். தற்போது அவரது கட்சியான தேமுதிகவுக்கு போதிய செல்வாக்கு இல்லாத நிலை இருக்கிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மூத்த மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் கட்சியை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார்.
இதனால் சினிமாவில் தன்னை கரம்பிடித்து தூக்கிவிட்ட விஜயகாந்துக்கு கைமாறா நடிகர் விஜய், தேமுதிகவுடன் இணைந்து கூட்டணியாக செயல்பட உள்ளாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே தான் பிரேமலதாவிடம் அடிக்கடி விஜயுடன் கூட்டணி வைப்பீர்களா? என்பது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் திருவள்ளூரில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்தார். இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். விஜயுடன் தேமுதிக சேர்ந்து செயல்பட வாய்ப்பு உள்ளதா?'' என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பிரேமலதா, ‛‛நான் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிவிட்டேன். இனி இந்த கேள்வியை நீங்கள் விஜயிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனால் இதுபோன்ற கருத்துகளை என்னிடம் கேட்க கூடாது. நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். இனி விஜய் தொடர்பான கருத்துகளை அவரிடமே கேட்டு கொள்ளுங்கள்'' என காட்டமாக கூறினார். அதாவது தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி விஜயிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛விஜய் மாநாட்டுக்கு திமுக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்'' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிரேமலதா, ‛‛நான் இதற்கும் பதில் அளித்துவிட்டேன். மதுரையில் நேற்று முன்தினம் தெரிவித்துவிட்டேன். இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் மாநாட்டுக்கு அனுமதி கேட்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அதற்கு அனுமதி கொடுப்பது அரசின் கடமை. பாதுகாப்பாக கொடுக்க வேண்டியது அரசின் வேலை. யாரும் கட்சி தொடங்க கூடாது. மாநாடு நடத்தக்கூடாது. பொதுக்கூட்டம் நடத்தக்கூடாது என்று யாரும் சொல் முடியாது. இதனால் அனுமதி கொடுத்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை'' என்றார்.












Click it and Unblock the Notifications