திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை: இளைஞரிடம் விடிய விடிய விசாரணை.. மாந்தோப்புக்கு அழைத்துச் செல்ல முடிவு!
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு தொடர்பாக மேற்கு வங்க மாநில இளைஞரிடம் போலீசார் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் நடந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து, ஆரம்பாக்கம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

குற்றவாளியை தேடும் பணிக்காக திருவள்ளூர் எஸ்.பி விவேகானந்தா சுக்லாவின் மேற்பார்வையில் அமைக்கப்பட்ட தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தனிப்படைகள் மற்றும் சிறப்பு குழுக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்த்தப்பட்டது.
17 தனிப்படைகள் மற்றும் 3 சிறப்புக் குழுக்களை சேர்ந்த டிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் உட்பட 500 போலீசார் தமிழகப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா உள்ளிட்ட பிற மாநில பகுதிகளிலும் குற்றவாளியை ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
குற்றவாளியை கைது செய்யக்கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளி பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.
குற்றவாளியை 12 நாட்களுக்கு மேலாக தேடி வந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தனர். அந்த இளைஞரின் உருவ அமைப்பு மற்றும் ஆடைகள், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளோடு ஒத்திருப்பது போல் தெரியவந்தது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞரை போலீசார் திருவள்ளூர் மாவட்ட பகுதிக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும், தனிப்படை போலீசாரிடம் சிக்கிய இளைஞரின் புகைப்படம், பாலியல் வன்கொடுமைக்குள்ளான சிறுமியிடம் போலீஸார் காட்டியபோது, அந்தச் சிறுமி, தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர் இவர்தான் எனச் சொன்னதாக கூறப்படுகிறது.
13 நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி கிடைத்துவிட்டார் என்ற தகவல் ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போல பரவியதையடுத்து, சிறுமியின் உறவினர்களும் பொது மக்களும் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். கைதான நபரை தங்களுக்கு காட்ட வேண்டும் என வாக்குவாதம் செய்தனர்.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட வட மாநில இளைஞரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றம் நடந்த மாந்தோப்புக்கு அந்த வடமாநில இளைஞரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநில இளைஞரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை முடிவுக்கு வந்த பிறகுதான், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் அவர் தொடர்புடையவரா என்பது தெரிய வரும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications