கொரோனா வார்டில் இருந்து தப்பித்து 3 கி.மீ நடந்து சென்றவர்... மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கொரோனா வார்டில் இருந்து தப்பித்து சென்றவர், 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற நிலையில், நடுவழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாலையில் மயங்கி விழுந்த உயிரிழந்தார்.
திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்த 40 வயது ஆண், அங்குள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து திடீரென அவர் காணாமல் போனார். அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடினார்கள்.. ஆனால் அங்கிருந்து அவர் தப்பிவிட்டது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று காலை திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையோரத்தில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அந்த வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தார்கள்.
விசாரணையில் அந்த நபர் கொரோனா வார்டில் இருந்து தப்பிச்சென்றவர் என்பது உறுதியானது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் அதிகாலை நேரத்தில் வீட்டுக்கு வர முயன்றுள்ளார். வரும் வழியில் மூச்சுத்திணறல் அதிகரித்து மயங்கி விழுந்து இறந்துள்ளாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து. அவரது சடலத்தை உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அடக்கம் செய்தார்கள்.












Click it and Unblock the Notifications