கார்த்திகை தீபநாளன்று கிரிவலம் செல்ல அனுமதி வேண்டும்! அதிமுக வேண்டுகோள்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி தரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
கார்த்திகை தீப திருவிழா அன்று லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலை வந்து தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை பார்ப்பது வழக்கம்.
திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி?
நாளை கார்த்திகை தீபம்
தமிழ்நாடு முழுவதும் நாளை கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். சிவாலயம் உள்ள மலைகளில் தீபம் ஏற்றப்படும். அப்போது பக்தர்கள் ஏராளமானோர் திரண்டு அண்ணாமலையாரை வழிபடுவது வழக்கம்.
2,668 அடி உயர மலையில் ஏற்றப்படும் தீபம்
நாளை அதிகாலை பரணி தீபம், மாலை 6 மணிக்கு அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டு இன்று மலைக்கு எடுத்து செல்லப்பட்டது. 5.9 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட இந்த மகா தீப கொப்பரை பஞ்சலோகத்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய அடுக்குகளாக செய்யப்பட்டது. கொப்பரையில் ஆன்மீக பக்தர்கள் காணிக்கையாக வழங்கப்படும் 3,500 லிட்டர் நெய் மற்றும் 1000 மீட்டர் காடா துணிகளை பயன்படுத்தி நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
பக்தர்களுக்குத் தடை
ஆண்டுதோறும் கார்த்திகை தீப நாளன்று லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சென்று சுவாமி தரிசனம் மற்றும் கிரிவலம் செல்வார்கள். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்திற்கும் தடை
மேலும் நாளை லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் நாளை கிரிவலம் செல்லவும், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யவும் மாவட்ட ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சபரிமலையில், திருப்பதியில் அனுமதி
ஆனால் கேரளாவில் சபரிமலை மகரஜோதியை காண இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் கட்டுப்பாடுகளுடன் ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்தில் மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மனு
எனவே மேற்கண்ட காரணங்களை காட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு அதிமுக சார்பில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கார்த்திகை தீப திருநாளான நாளை கட்டுப்பாடுகளுடன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அனுமதி தரவேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அதிமுக மாநில செய்தித் தொடர்பாளரும், ஆரணி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.