வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்!
திருவண்ணாமலை: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் வடக்கு, தெற்கு மத்திய மாவட்டத்தின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
அப்போது தினகரன் பேசுகையில் உள்ளாட்சி தேர்தலின் போது சீட் தருவதாக அதிமுகவினர் பொய் கூறி அமமுகவினரை இழுக்க முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்றே தெரியவில்லை. அதிலும் நடந்தால் அதிமுக வெற்றி பெறுமா என்ற கேள்விகள் உள்ளன.
அமமுகவிலிருந்து அதிமுகவுக்கு சென்றவர்கள் கட்சிக்காக போகவில்லை. சொந்த காரணத்திற்காகதான் செல்கின்றனர். அதிமுகவின் அமைச்சர்கள் தற்போது ஆள்பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். புதிய கல்விக் கொள்கையில் என்னென்ன அம்சங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்று எங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளோம்.
இன்னுமா இருக்கு.. தினகரனின் அதிமுக ஸ்லீப்பர் செல்கள்?
அந்த மாற்றங்களை செய்தால் போதும். கர்நாடகத்தில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது.
விவசாயிகள், விவசாய நிலங்கள், காடுகள், நீர்ஆதாரங்களை அழித்துதான் ஒரு ரோடு உருவாக்கி நாடு முன்னேற வேண்டும் என்று அவசியம் இல்லை. அதனால் 8 வழிச்சாலை திட்டம் கைவிடபட்டு ஏற்கனவே இருக்கின்ற சாலைகளை அகலபடுத்த வேண்டும் என்றார் டிடிவி தினகரன்.
கட்சியை இன்னும் பதிவு செய்ததால் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக போட்டியிடாது என தினகரன் ஏற்கெனவே கூறியிருந்தார்.