திருவண்ணாமலையில் நேரடியாக களம் இறங்கிய கலெக்டர்.. ஆக்கிரமிப்புகள் அதிரடியாக இடித்து அகற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கோலாகலமாக நடந்தேறும் கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் . எனவே கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், பக்தர்கள் தங்குதடையின்றி மாடவீதிகளிலும், கிரிவலப் பாதையிலும் செல்ல வசதியாகவும், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. கலெக்டரே ஆக்கிரமிப்புகளை அகற்ற நேரடியாக களம் இறங்கினார்.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா, தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. விழாவின் மிக முக்கியமான நிகழ்வுகளான, ஆறாம் நாள் உற்சவத்தில் வெள்ளி ரதம், ஏழாம் நாள் விழாவில் பஞ்சமூர்த்திகள் தேரோட்டமும் நடைபெறவுள்ளன. இந்த நாட்களிலேயே மாடவீதிகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.

இந்த வருட திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான, பரணி தீபம் மற்றும் மாலையில் மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் நிகழ்வு, வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெற இருக்கிறது. அன்று மட்டும், சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கிறது.
மாவட்ட நிர்வாகத்தின் தீவிர நடவடிக்கை
இந்த பெரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் தரிசனம் செய்து, கிரிவலம் செல்லவும் ஏதுவாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜின் நேரடி மேற்பார்வையில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டனர்.
மாடவீதிகளில் நடைபாதை கடைகள், தள்ளுவண்டி கடைகள், மேற்கூரைகள் என ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்தையும், எவ்வித பாரபட்சமும் இன்றி பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றினர். அதேபோல், சுமார் 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையிலும் நடைபாதைகளை ஆக்கிரமித்திருந்த அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகளும் அகற்றப்பட்டன.
இனிவரும் நாட்களில், மீண்டும் ஆக்கிரமிப்புகள் வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்கள் கண்டிப்பான எச்சரிக்கை விடுத்துள்ளார். பக்தர்களின் நலனுக்காகவும், பொது அமைதிக்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், கோவில் இணை ஆணையர் பரணிதரன், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உள்ளிட்ட பல துறை அதிகாரிகளும் உடன் இருந்தனர்.












Click it and Unblock the Notifications