அதிமுக இப்போ அடமான திமுக-வாக மாறிவிட்டது.. ஈரோடு இடைத்தேர்தல் படுதோல்வி நிச்சயம்.. கி.வீரமணி!
அதிமுக அடமான திமுகவாக மாறிவிட்டதாக கி.வீரமணி விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை: அதிமுக தற்போது அடமான திமுகவாக மாறிவிட்டதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வி அடையும் என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுகவின் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதால், எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர் செல்வம் இணைந்தார்.
அதன்பின்னர் ஒற்றைத் தலைமை பிரச்சினை எழுந்து, உட்கட்சி பூசல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இருப்பினும் இரு தரப்பும் பாஜகவின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சித்து வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் நேரடியாக கமலாலயம் சென்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஆதரவு கோரினர்.

பொதுக்கூட்டம்
இதனால் பாஜகவின் கைகளுக்குள் அதிமுக சென்றுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டு சாலை பகுதியில் திராவிடர் கழகம் கட்சி சார்பில் சமூக நீதி பாதுகாப்பு மற்றும் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார்.

கி.வீரமணி பேச்சு
இந்த பொதுக் கூட்டத்தில் கி.வீரமணி பேசுகையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு சம உரிமை ஏற்படுத்தியது திராவிட மாடல் ஆட்சி. அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி செய்துவருகிறது.

திராவிட மாடல் ஆட்சி
தமிழ்நாடு இளைஞர்கள் வேலைவாய்ப்பில் முன்னோடியாக திகழ்வதற்கான முக்கிய திட்டமான சேது சமுத்திர திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார். இத்திட்டத்தினை தற்போது ஆளும் மத்திய அரசும், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுகவும் தடுத்து நிறுத்தியதால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திராவிட மாடல் ஆட்சி பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் சேது சமுத்திர திட்டத்தினை கொண்டுவரும் நோக்கில் தான் பல பகுதிகளில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்து வருகிறது.

அடமான கட்சி அதிமுக
தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசின் கை பாவையாக செயல்படுவது தமிழக மக்கள் மத்தியில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக மத்திய அரசின் அடமானக் கட்சியாக செயல்பட்டு வரும் நிலையில் தோல்வியை தழுவும் என்பது தெரிந்து எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி குளறுபடியாக பேசி வருகிறார். ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் அமோக வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications