கொரோனாவை நினைத்தால்... தூக்கம் கூட வருவதில்லை... தழுதழுத்த எ.வ.வேலு
திருவண்ணாமலை: கொரோனாவில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனை மட்டுமே உள்ளதால் இரவு நேரத்தில் கூட தனக்கு தூக்கம் வருவதில்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புவோர் தலை முதல் கால் வரை குளித்துவிட்டு தான் வீட்டுக்குள் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுவையில் கொரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு.. புதிதாக 27 பேர் பாதிப்பு
வேலு வீடியோ
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து திமுக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர், முகக்கசவம் அணியாமல் பொதுவிடங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட மக்கள் செல்ல வேண்டாம் என்றும், மற்ற மாவட்டங்களை விட திருவண்ணாமலையில் நோயின் பாதிப்பு அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பெயருக்கு அல்ல
இதேபோல் முகக்கவசம் அணிந்தால் அதனை மூக்கு, வாய், உள்ளிட்ட பகுதியை முழுமையாக மூட வேண்டும் என்றும், பெயருக்கு முகக்கவசம் அணிந்துகொண்டு அதனை மூக்கு கீழேயும், கழுத்திலும் மாட்டிக்கொண்டு அலையக்கூடாது எனவும் எ.வ.வேலு சுட்டிக்காட்டியுள்ளார். எப்போது வெளியே சென்று வந்தாலும் உடனடியாக குளித்துவிட்டு மாற்று உடைகளை அணிய வேண்டும் என்றும், வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் தொற்றை பரப்பிவிடக் கூடாது எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மக்கள் பாதுகாப்பு
கொரோனா பாதிப்பில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற உந்தலால் இரவு நேரத்தில் கூட தனக்கு தூக்கம் வருவதில்லை என்றும், இதனால் தான் சமூக வலைதளங்கள் மூலம் மனதில் நினைப்பதை பகிர்வதற்காக வீடியோ வெளியிட்டுள்ளதாகவும் எ.வ.வேலு கூறியுள்ளார். மேலும், வெளியூர்களில் இருந்து வருவோரை அடையாளம் கண்டு அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிராமங்களில் மறைந்து
சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து கிராமங்களுக்கு வருவோர், எந்த தகவலும் தெரிவிக்காமல் மறைந்து வாழ்ந்து கொரோனா தொற்றை பரப்பி சிலர் நிரந்தரமாக மறைய வழிவகை செய்துவிடுவதாக வேதனை தெரிவித்தார். வியாபாரிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த வீடியோவை தாம் வெளியிட்டதன் நோக்கம் என எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.