திருவண்ணாமலையில் பணமே இல்லாமல் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்க படிக்க விண்ணப்பிப்பது எப்படி?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 27, மாணவிகளுக்கு 13, கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்கு 5, மாணவிகளுக்கு 4 ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தமிழ்நாடு அரசால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு என மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. பள்ளி விடுதிகளில் மாணவர்களுக்கு 27, மாணவிகளுக்கு 13, கல்லூரி விடுதிகளில் மாணவர்களுக்கு 5, மாணவிகளுக்கு 4 ஆகியவை செயல்பட்டு வருகிறது.

பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும் மற்றும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் என்.இ.இ.டி., ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜமக்காளம், பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பாய்களும் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 18-ந் தேதிக்குள்ளும் (புதன்கிழமை), கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும் பொழுதும் சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு என தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications