பொய்ச்சாமி.. சாரி சாரி பழனிசாமி.. தரையிலேயே ஊராம தலையை கொஞ்சம் தூக்கிப் பாருங்க.. விளாசிய ஸ்டாலின்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று நடைபெற்ற பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக விளாசினார்.
திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசியிருக்கிறார். பத்திரிகைகளில் படித்துப் பார்த்தேன். அது பேச்சு அல்ல, வயிற்றெரிச்சல். தன்னுடைய வயிற்றெரிச்சலை வார்த்தைகளாகக் கொட்டி இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டுகால சாதனைகளைச் சொல்ல ஆரம்பித்தால் அதற்கே இரண்டு மணி நேரமாகும்! அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம்!

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த 'பச்சைப் பொய்யர்' பழனிசாமி, சொன்னதிலேயே பெரிய பொய் எது என்றால் அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைத்தான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோமாம். பிளான் போட்டு, கட்டி முடித்து வைத்துவிட்டார்களாம். நாம் சென்று ரிப்பன் வெட்டிவிட்டு வந்துவிட்டோமாம். யாரு? பொய்ச்சாமி, மன்னிக்கவும் பழனிசாமி பேசுகிறார்.
நான் கேட்கிறேன், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களை அன்போடு பணிவோடு கேட்கிறேன், விடியல் பயணம் - பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா?; காலைச் சிற்றுண்டித் திட்டம், யார் போட்ட திட்டம்?; புதுமைப் பெண் திட்டத்தில், மாணவியர்க்கு 1000 ரூபாய் தருகிறோமே, இது பழனிசாமியின் திட்டமா?

இலட்சக்கணக்கான மாணவர்களை முன்னேற்றும் 'நான் முதல்வன் திட்டம்' அ.தி.மு.க. திட்டமா?; நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி - இதெல்லாம் என்ன என்றாவது பச்சைப் பொய்யர் பழனிசாமிக்கு தெரியுமா?; 2 லட்சம் உழவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். இது அ.தி.மு.க. திட்டமா; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? இது பா.ஜ.க.வின் பாதம் தாங்கியாக இருக்கிறாரே பழனிசாமி அவரின் ஆட்சியில் நடந்ததா?; மாபெரும் தமிழ்க் கனவு - தமிழ் பரப்புரைக் கழகம் நடத்தி வருகிறோமே! இந்த திட்டம் எல்லாம் பழனிசாமியின் கனவிலாவது வந்திருக்குமா?
தந்தை பெரியார் - அண்ணல் அம்பேத்கர் - அருட்பிரகாச வள்ளலார் - மகாகவி பாரதியார் ஆகியோருக்கான விழாக்களை நம்மை திராவிட மாடல் அரசு நடத்துகிறதே, இவர்களின் கொள்கைகளாவது என்ன என்று கம்பராமாயணம் படித்த பழனிசாமி சொல்வாரா? வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு போராடிய இடஒதுக்கீட்டு தியாகிகளுக்கு மணிமண்டம் அமைத்து வருகிறோமே, இது அ.தி.மு.க ஆட்சியில் போட்ட திட்டமா?
ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்த பழனிசாமி தன்னுடைய ஆட்சியில் கண்டுகொண்டாரா? அரசு ஊழியராக இருக்கும் மகளிருக்கு மகப்பேறு விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக்கியது நம்முடைய தி.மு.க ஆட்சி! ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.
இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே! தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது!" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications