என் அக்காவை மீட்டு கொடுங்க? கதறும் சிறுமிகள்: தி.மலையில் மக்கள் போராட்டம்
திருவண்ணாமலை: கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் ஏற்பட்ட மலைச்சரிவு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடே தயாராகிக் கொண்டிருக்கும் போது அந்த ஊர் இப்போது மீட்க முடியாத ஒரு சோகத்தில் மூழ்கித் தத்தளித்து வருகிறது. கடந்த சில நாட்களாகப் பெய்த கன மழை பொழிவு காரணமாக திருவண்ணாமலையில் வ.உ.சி. நகர் பகுதியில் கடுமையான மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு குட்டி வயநாடு போல் காட்சி அளிக்கிறது. முன்பே இரண்டு இடங்கள் மண் சரிவைச் சந்தித்த நிலையில், தென்கிழக்கு பகுதியில் சுமார் 1000 அடி மலை உச்சியிலிருந்து மூன்றாவது இடத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கும் வசிக்கும் மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தின்போது ராட்ச பாறை சரிந்துள்ளதால் மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் வசிக்கும் மக்களின் வீடுகளின் மேல் மண் சரிந்து விழுந்துள்ளது. சுமார் 40 டன் எடை உள்ள ராட்சதப் பாறை மலை உச்சியிலிருந்து உருண்டு வந்ததில், சுமார் 20 அடி சரிந்து மண் குவியல் பல முழுமையாக வீடுகளை மூடிவிட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் பற்றி தமிழ்நாடு தன்னார்வலர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், அங்கே என்ன நடந்தது என்ற சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அவர், "இதுவரை 1500க்கும் மேலான மக்கள் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால், அந்த மக்கள் குளிரைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள். உடுத்த மாற்றுத் துணிகூட இல்லை. அதுதான் இப்போதைக்கு அதிகம் தேவையாக உள்ளது. இதுவரை 150 வீடுகள் முழுமையாகப் புதைந்துவிட்டன. இன்னும் நிலச்சரிவு நிற்கவில்லை.

வானிலை ஆய்வு மையம் ஃபெஞ்சல் புயல் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டது. சென்னையில் அதற்கான முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென்று பாதிப்பு திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி பக்கம் ஏற்படுகிறது. விழுப்புரமே எங்கே எனத் தேட வேண்டிய நிலை இருக்கிறது. கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகமே பாதிக்கப்பட்டுக் கிடக்கிறது. யாருமே இதை எதிர்பார்க்கவே இல்லை. இந்தப் புயலால் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என்கிறார்.
இந்தச் சம்பவத்தில் 5 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிர்சி, ரூபி ஆகிய சிறுமிகளின் உடலை மோப்பநாய்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மீட்புப்பணிகளை நிறுத்தி வைத்திருந்ததாகப் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இரண்டு நாட்களாக மழைப்பொழிவு இல்லாதபோதும் ஏன் பணிகளை நிறுத்த வேண்டும் என்று கேட்கிறார் இந்தப் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர்.

இந்நிலையில் இன்று பொக்லைன் மூலம் பாறைகளை அகற்றும் பணி தீவிரம் பெற்றுள்ளது. மீட்புப் படையினர் புதைந்து போன சிறுமியின் வீட்டின் முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் பாறைகள் அதிகம் உள்ளதால், அதை அகற்றுவது பெரிய சவாலாக உள்ளது. அதன்பின்பு உடல்கள் எப்போது மீட்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்த முடியும் என்கிறார்கள். துணை காமாண்டர் ஸ்ரீதரும் இதையே தெரிவித்துள்ளார்.
ஆனால், வ.உ.சி. நகர் மக்கள் மலை அடிவாரத்தில் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் மலைக்கு மேல் உள்ள சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்னும் தொடங்கவில்லை என்றும் புகார் கூறுகின்றனர். அதைக் கண்டித்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பல குழந்தைகள் பள்ளி சீருடையுடன் உள்ளனர். அவர்களுக்கு மாற்று உடைகூட கிடைக்கவில்லை. தனது அக்காவை மீட்டுக் கொடுக்கும் படி சிறுமி ஒருவர் கதறி அழுத காட்சி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications