ராணுவ வீரர் மச்சான்தான் கத்தியால் வெட்டினார்.. மனைவிக்கு எதுவுமே ஆகல! திருவண்ணாமலை போலீஸ் விளக்கம்
திருவண்ணாமலை: ராணுவ வீரரின் மனைவியை அரை நிர்வாணப்படுத்தி தாக்கியதாக வீடியோ வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக திருவண்ணாமலை எஸ்பி விளக்கமளித்து இருக்கிறார்.
பிரபாகரன் என்ற ராணுவ வீரர் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு தமிழ்நாடு அரசை விமர்சித்ததுடன் காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில், "சமூக வலைதளங்களில் பிரபாகரன் என்ற இராணுவ வீரர் திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமத்தில் கீர்த்தி என்ற தனது மனைவியை கடை காலி செய்வதில் உள்ள பிரச்சனை காரணமாக சிலர் அடித்து மானபங்கம் செய்ததாக பேசும் வீடியோ குறித்து விசாரணை செய்யப்பட்டது.
அதில், திருவண்ணாமலை மாவட்டம், படவேடு கிராமம் ரேணுகாம்பாள் கோவில் அருகே ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குன்னத்துர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் கட்டிடம் கட்டி படவேடு கிராமத்தைச் சார்ந்த செல்வமூர்த்தி என்பவருக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.9.50/-லட்சம் பெற்றுக்கொண்டு மாத வாடகையாக ரூ.3000/-க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மேற்கண்ட குமார் இறந்துவிடவே அவரது மகனான ராமு என்பவர் கடையை தங்களிடம் திரும்ப ஒப்படைக்கக்கோரி மேற்படி செல்வமூர்த்தியிடம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி செல்வமூர்த்திக்கு ரூ.9.50/- லட்சம் ராமு கொடுத்து விடுவது என்றும், அதைப் பெற்றுக்கொண்டு 10.02.2023-ந் தேதியன்று செல்வமூர்த்தி கடையை காலி செய்வதென்றும் இருவருக்கும் எழுத்து மூலமாக உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர், செல்வமூர்த்தி ஒப்பந்தப்படி பணத்தையும் பெற்றுக் கொள்ளாமலும், கடையையும் காலி செய்யாமலும் இருந்து வந்துள்ளார். ராமு பலமுறை முயற்சித்தும் பலனளிக்காமல் போகவே நேற்று (10.06.2023) காலை சுமார் 10.00 மணிக்கு ராமும் அவரது குடும்பத்தினரும் மேற்படி கடையில் சென்று செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோரிடம் பணத்தை கொடுத்து கடையை காலி செய்யக் கூறியபோது செல்வமூர்த்தியின் மகன் ஜீவா என்பவர் கத்தியால் ராமுவின் தலையில் தாக்கியுள்ளார்.
அப்போது ராணுவ வீரரின் மனைவியுமான மேற்படி செல்வமூர்த்தியின் மகளுமான கீர்த்தி மற்றும் அவரது தாயாரும் இருந்துள்ளனர். ராமுவிற்கு ஏற்பட்ட இந்த காயத்தை பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ராமுவிற்கு ஆதரவாக ஓடிவந்து ஒப்பந்தப்படி கடையையும் காலி செய்ய மறுத்துள்ளீர்கள், கடையின் உரிமையாளரையும் தாக்குகிறீர்கள் என்று ஆவேசப்பட்டு கடையிலிருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டுள்ளார்கள்.
மேலும், பொதுமக்கள் ஆவேசப்பட்டு பொருட்களை எடுத்து வீசியுள்ளார்களே தவிர கீர்த்தியையோ அவரது தாயாரையோ யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் இந்த விஷயம் முற்றிலும் மிகைப்படுத்தி கூறியுள்ள தகவல் என தெரியவருகிறது.
இருப்பினும், இருதரப்பிலும் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் சந்தவாசல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன் உண்மை தன்மையின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று விளக்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications