திருவண்ணாமலையில் தீப நாளில் திடீர் பரபரப்பு! அப்படியே சரிந்த சுற்றுச்சுவர்! மூவர் மயக்கம்,பலர் காயம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மகா தீபத்திற்கு இலவச அனுமதிச்சீட்டைப் பெற பக்தர்கள் குவிந்தனர். அப்போது அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், 3 பேர் மயக்கமடைந்தனர். மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
சிவனின் பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை. இங்கே சிவன் ஜோதி வடிவமாகக் காட்சி அளிப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இங்கே கார்த்திகை தீபத்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

அதன்படி இந்தாண்டு கார்த்திகை மாத திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் எழுந்தருளினர்,
கார்த்திகை தீபம்: கடந்த வியாழக்கிழமையன்று பஞ்சரத தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்றது இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கார்த்திகை தீப திருவிழாவான இன்று அதிகாலை 5 மணிக்குப் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து இன்று மாலை கோயிலின் பின்புறமாம் அமைந்துள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. சிவனும், சக்தியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்தாண்டு மகா தீபத்தை மலை மீது சென்று தரிசிக்க 2500 பேருக்கு மட்டுமே அனுமதி தர முடிவு செய்யப்பட்டது. மலை மீது தரிசிக்க விரும்பும் பக்தர்கள் அதற்கான இலவச அனுமதிச் சீட்டை திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்படும்.
குவிந்த பக்தர்கள்: 2500 பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு என அறிவிக்கப்பட்ட நிலையில், 10,000 பேர் அங்கே குவிந்தனர். பலரும் அனுமதிச்சீட்டைப் பெற நேற்றிரவே குவிந்தனர். அப்போது அங்கே உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. 2,500 அனுமதிச் சீட்டிற்கு 10 ஆயிரம் பேர் குவிந்த நிலையில், போலீசார் உரியப் பாதுகாப்பை வழங்கவில்லை என்றும் வெறும் சில அதிகாரிகள் மட்டுமே பாதுகாப்புப் பணிகளில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இலவச அனுமதிச் சீட்டை வழங்கத் தொடங்கியதும் பலரும் ஒரே நேரத்தில் உள்ளே வர முயன்றுள்ளனர். குவிந்திருந்த பொதுமக்கள் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டே உள்ளே வந்துள்ளனர். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பலரும் அங்கே கீழே விழுந்தனர். அவர்களில் சுமார் 10 பேருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டது. மேலும், இதில் மூன்று பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தள்ளுமுள்ளு காரணமாக அங்கே இலவச பாஸ் வழங்குவது சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சற்று நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாஸ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலையில் இன்று மகா தீபம் ஏற்றப்படும் நிலையில், அவசர உதவிக்குத் தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-28447703, 044 28447701, 89396 86742 என்ற எண்களில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம். குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான உதவிக்கு 9342116232, 8438208003 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications