திருவண்ணாமலையில் இப்ப நிம்மதி.. தீபமலையில் துண்டு துண்டாக சிதறிய பிரம்மாண்ட பாறை - முழுமையாக அகற்றம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபமலையில் அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறை, துண்டு துண்டாக உடைக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது.. தற்போது டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் மும்முரமாக வ.உ.சி. நகரில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் வீசிச்சென்ற பெஞ்ஜல் புயல் காரணமா, பலத்த கனமழை தமிழகத்தில் கொட்டியது.. இந்த கனமழையால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது.

திருவண்ணாமலை: அப்போது அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் உள்ள திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஒரு வீட்டில் இருந்த 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண், பாறைகளில் சிக்கி மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்..
அதுமட்டுமல்லாமல, இந்த துயர சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகிலேயே, மலையிலிருந்து சுமார் 40 டன் எடை கொண்ட ராட்சத பாறை உருண்டு வந்தது.. இது மிகவும் அபாயகரமான நிலையில் குடியிருப்பு பகுதிக்கு பக்கத்திலேயே நின்றது. இதனால் அச்சமடைந்த அந்த பகுதி மக்கள், உடனடியாக பாறையை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.
பாறைகள்: இதையடுத்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் திருச்சியில் இருந்து பாறை உடைக்கும் வல்லுனர்கள் குழுவினர் திருவண்ணாமலைக்கு கடந்த 22-ந் தேதி வந்தனர்.. அன்றைய தினமே அபாயகரமான நிலையில் நிற்கும் ராட்சத பாறை மற்றும் மண் சரிவின்போது வ.உ.சி. நகர் பகுதியில் மலையில் இருந்து உருண்டு வந்த பாறைகளையும் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற துவங்கின.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக பாறைகளை அகற்றும் பணி நடைபெற்றது.. இந்த நிலையில், அபாயகரமாக இருந்த 40 டன் ராட்சத பாறையும் தற்போது முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது..
சைலண்ட் ராக் கிராக்: திருச்சியை சேர்ந்த தனியார் பாறை வெடி வைத்து அகற்றும் குழுவினர், பாறையில் துளைகளை போட்டு உடைத்தனர்.. பிறகு, சைலன்ட் ராக் கிராக் என்ற வெடிபொருளை, அந்த துளைக்குள் நிரப்பி, அதன் மூலம் பாறைகள் சிதறாமல் வெடிக்க வைக்கப்பட்டது. இறுதியில் ராட்சச பாறையின் 2 பகுதிகளும் துண்டாகி விழுந்தன.. மீதமுள்ள பாறையும் பிரேக்கர் இயந்திரம் மூலம் துண்டாக உடைக்கப்பட்டது.. இவைகளை தற்போது டிராக்டர் மூலமாக கொண்டு செல்லும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
கடந்த சில நாட்களாகவே கலக்கத்தை தந்து கொண்டிருந்த பாறைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து, இதையடுத்து, திருவண்ணாமலையில் நிம்மதி பெருமூச்சு பொதுமக்களிடமிருந்து எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications