திருவண்ணாமலை மண்சரிவுக்கு காரணம் என்ன? மலை அடிவார மக்களுக்கு என்ன தீர்வு? து.முதல்வர் உதயநிதி பதில்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டது குறித்து சென்னை ஐஐடி நிபுணர்கள் மண் பரிசோதனை நடத்தவுள்ளதாகவும், மலைக்கு அருகே வசித்து வரும் மக்கள் வெளியே வருவதற்கு தயாராக இருந்தால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வோம் என தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நிலச்சரிவினால் புதையுண்டவர்களின் சடலங்களை மீட்கும் பணியினை பார்வையிட்ட அவர், முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஃபெஞ்சால் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடி பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 இலட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சாலைகள், பாலங்கள் 61001 ஏராளமான முக்கிய கட்டுமானங்கள். உட்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த மிகப்பெரிய பாதிப்பைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு, National Disaster Response Fund-லிருந்து உடனடியாக முதற்கட்டமாக, 2,000 கோடி ரூபாய் அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிற்கும் பிரதமர் அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து வருகின்றோம். பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வருகிறோம். நேற்றைய தினம், சென்னை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்தோம்.
இன்றைக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், மதியம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு. திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகை தந்து ஆய்வு செய்கின்றோம். கனமழையால், தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தக்கூடிய ஒரு சோகமான சம்பவம் திருவண்ணாமலையில் நடந்துள்ளது.
திருவண்ணாமலையில் வ.உசி நகர் 11-வது தெருவில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது நேற்று முன் தினம் மாலை சுமார் 4.00 மணியளவில், தொடர் கனமழை காரணத்தால், மலையிலிருந்து ஒரு பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்துள்ளது. இதில், அவருடைய வீடு, மண் மற்றும் பாறையால் முழுவதுமாக மூடப்பட்டு புதையுண்டது. இந்த வீட்டிற்குள் இருந்த ராஜ்குமாரின் மனைவி மீனா (வயது 27), அவரது 8 வயது மகன் கௌதம். 5 வயது மகள் இனியா, அவர்களுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த 7 வயதான ரம்யா, 14 வயது நிரம்பிய விநோதினி மற்றும் 7 வயதான மகா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்துள்ளார்கள்.
இதையடுத்து,தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கமாண்டர் உட்பட 20 வீரர்கள் நேற்றிரவு முதல் வீட்டிற்குள் சிக்கிய 7 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நம்முடைய மாநில அரசு சார்பாக தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மீட்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அவர்களும், மீட்பு பணிகளை இரவு பகலாக நின்று ஒருங்கிணைத்து வருகின்றார். எப்படியாவது நல்ல செய்தி வரும். 7 பேரும் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்த்தோம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் அதைத்தான் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், இன்று மாலை 6.30 மணியளவில் மண்ணில் புதைந்த வீட்டில் சிக்கிய 4 பேரின் உடல்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன.
மற்ற மூன்று பேரின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மாண்புமிகு அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் இந்த மீட்புப் பணியினை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மீட்புப்பணியை நான் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றேன். கனமழையால் மலையிலிருந்து ஏற்பட்ட மண்சரிவு மற்றும் பாறை சரிவில் சிக்கி 7 உயிர்கள் பறிபோயிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும். அவர்களின் மரணத்துக்கு என்னுடைய இரங்கலை அரசு சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும், அவர்களின் உறவினர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கின்றேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூபாய் 5 லட்சத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். அதனை நாளை மாலைக்குள் கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் சொல்லியிருக்கின்றேன்.
மேலும், திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்படுவதால், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.
அதுமட்டுமில்லாமல் சென்னை ஐ.ஐ.டி இருந்து மண் (சாயில்) டெஸ்ட் எடுக்க ஐ.ஐ.டி டெக்னீசியன் மோகன், பூமிநாதன் அவர்களெல்லாம் வந்துள்ளார்கள். அவர்கள் மண்ணின் தரத்தை ஆய்வு செய்வார்கள். மலைக்கு அருகே வசிக்கும் மக்கள் வெளியே வருவதற்கு தயாராக இருந்தால், அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வோம்" என்றார்.












Click it and Unblock the Notifications