“முழு சங்கியாக மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி”.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி அட்டாக்!
திருவண்ணாமலை: "பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிடுவார். வெள்ளை வேட்டி சட்டையுடன் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி காவிமயமாக மாறிவிட்டார்" என விமர்சித்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
திருவண்ணாமலை திமுக வடக்கு மண்டல பயிற்சி பாசறைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, கட்சியினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "சில கட்சிகள் பூத் கமிட்டி முகவர்கள் கூட இல்லாத நிலையில் உள்ளன. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி. புதுமைப் பெண் திட்டத்தில் 8 லட்சம் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். திராவிட மாடல் அரசால் நம்பர் ஒன் இடத்தில் தமிழகம் உள்ளது. வாக்காளர் பட்டியில் உள்ள பெயர்களை மனப்பாடமாக கூறும் அளவுக்கு திறமையானவர்கள் திமுகவில் உள்ளனர்.
காலை உணவு திட்டத்தில் தரமான உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் 70 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சம் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது. பாஜக அரசு பாசிச மாடல் அரசு. அதிமுக அரசு அடிமை மாடல் அரசு. 234 தொகுதிகளில் 68 ஆயிரத்துக்கும் மேல் வாக்குச்சாவடிகள் பயிற்சி கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் களத்தில் திமுக ஆழமாக காலடி வைத்துள்ளது.
திமுக அரசின் திட்டங்களை வீடு வீடாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். மகளிர் விடியல் பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் தமிழக முழுவதும் 730 கோடிக்கும் மேலான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை என்ற திட்டத்தின் மூலம் மீண்டும் குறுக்கு வழியில் ஹிந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர். தொகுதி வரையறை என்பதன் பெயரில் மக்களவை உறுப்பினர்கள் தொகுதியை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்துக்கான நிதி உரிமை பறிக்கும் வகையில் மத்திய பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு என்ற பேரணியில் முழுமையாக முடித்து விட்டாலே வரும் சட்டமன்ற தேர்தலில் நமக்கு வெற்றி உறுதியாகும். இதன் மூலம் கடந்த பத்து நாட்களில் மட்டும் 91 லட்சம் உறுப்பினர்களை திமுகவில் சேர்த்துள்ளோம்.
இதையெல்லாம் பார்த்து தான் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் ஏற்பட்டுள்ளது. பாஜகவோடு எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று கூறிவிட்டு டெல்லியில் நான்கு கார்கள் மாறி மாறி சென்று கள்ளக் கூட்டணியை வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி போல் நாங்கள் அமித் ஷா வீட்டுக் கதவை தட்டவில்லை.
கோயில் நிதியில் கல்லூரி தொடங்கினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் கோபம் வருகிறது? பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிடுவார். வெள்ளை வேட்டி சட்டையுடன் பரப்புரையை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி முழு காவிமயமாக மாறிவிட்டார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி டெபாசிட் இழக்கும். தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் நின்று பாசிசத்தை விரட்டுவார்கள்" என விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications