மாவட்ட பொது செயலாளர் பதவியை பறித்த பாஜக.. லட்சக்கணக்கில் பணம் பறித்து தொக்காக மாட்டியதால் ஆக்ஷன்!
திருவாரூர்: மோசடி புகாரில் கைதான பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரனின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகனுக்கு வி.ஏ.ஓ வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரன் என்பவர் பல கட்டங்களாக ரூ.2.65 லட்சம் பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், இதுவரை வேலை வாங்கித் தராத நிலையில், பணத்தை திருப்பி கேட்டுள்ளார் சாந்தி. ஆனால், ராஜேந்திரன் பணத்தை திருப்பி தராததால் சாந்தி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்த பாஜக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் ஆனந்தவள்ளி என்பவரிடமும் இதேபோல ராஜேந்திரன், அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக் கணக்கில் பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. பாஜக நிர்வாகி மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட பாஜக திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரனின் கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை ராஜேந்திரன், கட்சி கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டதால், அவர் மாவட்ட பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பஜாக திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications