முஸ்லிம் வேடமணிந்து பேசிய இளைஞர் வீடியோ.. பாஜக நாடக கம்பெனி நடத்துது! மமக பரபர குற்றச்சாட்டு
திருவாரூர்: இஸ்லாமியர் போன்று வேடமணிந்து இளைஞரை பேச வைத்து வீடியோ வெளியிட்டு இருக்கும் பாஜக மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி திருவாரூர் மாவட்டத் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட அறிக்கையில், "நாடக கம்பெனி நடத்தும் பாஜக. என் மண் என் மக்கள் என்ற பெயரில் பல்வேறு அயோக்கியத்தனங்களையும், புதுப்புது நாடகங்களையும் அரங்கேற்றி வரும் பொய்யில் புலவன் அண்ணாமலை கூட்டம் யூடியூப் சேனலில் பித்தலாட்ட காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் தொப்பி அணிந்த இஸ்லாமிய இளைஞரை போன்ற வேடமிடப்பட்ட சங்கிகள் சிலரை பேச வைத்து "இஸ்லாமிய முதல் தலைமுறை வாக்காளர் எடுத்த சபதம்" என்ற பெயரில் போலி காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் தன்னை ஃபைசல் என்று அறிமுகம் செய்யும் இளைஞர் அண்ணாமலை தான் அடுத்த முதல்வராக வரவேண்டும் என்று சொல்லக்கூடிய போலி செய்தியை வெளியிட்டு குதூகலம் அடைந்து வருகிறது. இந்த காணொளியில் பேசும் பைசல் என்ற இளைஞன் சவளக்காரன் என்ற ஊரை சேர்ந்த முரளி என்பவரின் மகன் சஞ்சய் என்பது தெரிய வந்து உள்ளது.
இந்த ஆள் மாறாட்ட அயோக்கியத்தனத்தை செய்த பாஜகவின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு திரு.வி.க கல்லூரியில் தேர்வு எழுத ஆள் மாறாட்டம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது ஒரு சின்ன சங்கிக்கு முஸ்லிம் வேஷம் இட்டு ஆள்மாறாட்டம் செய்து காணொளியை வெளியிட்டு இருக்கிறார். ஆள் மாறாட்ட அயோக்கியர்களின் இதுபோன்ற கேடுகெட்ட வேலைகளை யாரும் நம்ப போவதும் இல்லை. அவர்களை ஆதரிக்கப் போவதும் இல்லை.
தொடர்ச்சியாக ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவாரூர் மாவட்ட பாஜகவை வன்மையாக கண்டிப்பதோடு, இரு சமூகங்களுக்கு இடையில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வீடியோவில் இருந்த சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், இந்த காணொளியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications