கஜாவின் கோர தாண்டவம்.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
Recommended Video
திருவாரூர்: கஜாவின் கோரதாண்டவம் அடங்கினாலும் அது விட்டு சென்ற பாதிப்புகள் இன்னும் தீராததால் இன்றும் திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புதிதாக உருவான புயலுக்கு கஜா என பெயரிடப்பட்டது. இதனால் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது. இதனால் வேதாரண்யம், நாகை, திருவாரூர், காரைக்கால், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கஜா புயல் கரையை கடந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் கடுமையாக உள்ளது. மேலும் பள்ளிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டதால் வெள்ளம் வடிந்த பிறகே அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இதையடுத்து திருவாரூர், சிவகங்கை மாவட்டங்களிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அதன் ஆட்சியர்கள் நிர்மல்ராஜ் மற்றும் ஜெயரகாந்தன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அதுபோல் காரைக்குடியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால், தேனி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் ஆட்சியர்கள் கேசவன், பல்லவி பல்தேவ் ஆகியோர் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர்.
வேதாரண்யம் நேற்று காலையுடன் மழை ஓய்ந்திருந்த நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. கஜா புயலால் வேதாரண்யமே உருகுலைந்து காணப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன.