'திருவாரூர்' தமிழகத்திற்கே வழிகாட்டி.. காட்டூர் ஊராட்சியில் 100% தடுப்பூசி.. மா.சுப்ரமணியன் தகவல்
திருவாரூரில் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்
திருவாரூர்: தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதில் தமிழகத்திற்கே வழிகாட்டி திருவாரூர் மாவட்டம் தான் என்றும், காட்டூர் என்ற ஊராட்சி தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான ஊராட்சியாக விளங்குகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது.. இதற்காக சுகாதாரத்துறையும் முழுவீச்சில் செயல்படு வருகிறது.. தடுப்பூசி முகாம்களும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவாரூர் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

பேட்டி
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள முதல்வர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். மதுப்பிரியர்கள் மற்றும் அசைவ பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போடுவதால் பெரும்பாலும் தடுப்பூசி போட சாக்குபோக்கு சொல்கிறார்கள், அதனால் தான் முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது.. இன்று மதியம் ஒன்றரை மணி நிலவரப்படி தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன...

இலக்கு
அதிலும் குறிப்பாக 2வது டோஸ் செலுத்துபவர்கள் ஆர்வமாக செலுத்தி கொள்கின்றனர்... இன்று மாலை 7 மணி வரை இந்த முகாம் தமிழகம் முழுவதும் நடைபெறும், திருவாரூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 61.4 சதவீதம் ஆவர்.. இன்று மாலைக்குள் இந்த சதவீதமானது மேலும் அதிகரிக்கும். அதேபோல, மாவட்டத்தில் 6வது தடுப்பூசி முகாம் 500 இடங்களில் நடந்து வருகிறது.. இன்று 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

கையிருப்பு
இப்போதைக்கு ஒரு லட்சத்து 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன... திருவாரூர் மாவட்டம் தான் தமிழகத்திற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது, காரணம், திருவாரூர் மாவட்டம் காட்டூர் என்ற ஊராட்சியில் அனைவருமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்கள்.. காட்டூர் என்ற ஊராட்சி தமிழகத்திற்கு ஒரு முன்மாதிரியான ஊராட்சியாக விளங்குகிறது.

கோரிக்கை
இந்த மாவட்டத்தில் துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.. அதன்படி19 துணை சுகாதார நிலையங்கள் தலா 30 லட்சம் வீதம் சீரமைக்கப்படும்... அதேபோல, திருவாரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் 40 லட்சத்திற்கு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன... ஆகமொத்தம், இந்த நிதியாண்டில் 8 கோடியே 37 லட்ச ரூபாய் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தடுப்பூசி
தற்போது மத்திய அரசு தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.. கல்லூரியில் சேரும் மாணவர்கள் 17 - 18 வயதுக்கு உட்பட்ட நபர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுள்ளோம்.. இதுகுறித்து முடிவு எடுத்து அறிவித்தால் விரைவில் தமிழகத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும்... சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் அடுத்த அலை பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் தினசரி பதிவாகும் கொரோனா கேஸ்களும் அதிகரித்து வருகிறது.

தளர்வுகள்
ஆனால், இப்போதைக்கு நம் தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைகிறது.. அதற்காக பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது.. மாஸ்க் அணிய வேண்டும்.. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் தீர்வு தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். விழாக்காலம் என்பதற்காக கொரோனா விதிமுறைகளில் தளர்வு கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications