தமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு
திருவாரூர்: நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும் பங்கு தமிழர்களுக்கு உண்டு என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி தொடங்கினார். இன்றுடன் அக்கட்சி ஓராண்டு முடிந்து 2-ஆவது ஆண்டில் அடையெடுத்து வைக்கிறது.
கட்சியின் 2-ஆவது ஆண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கொண்டாடியுள்ளார். அங்கு இன்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகையில் நான் இனி உங்கள் சொத்து. என்னை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாக்களிக்கும் போது மனம் மாறாமல் நாட்டை பற்றி நினைத்துக் கொள்ள வேண்டும். மக்களாகிய நீங்கள் முதலாளி என்று எண்ணுங்கள். நான் உள்பட அனைவரும் உங்களுக்கு வேலைக்காரர்கள்.
நாட்டின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்யும் பெரும்பங்கு தமிழர்களுக்கு உள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுப்போயுள்ளது.
மக்களுக்கு எதுவும் தெரியாது என நினைத்து இன்னும் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். கிராம சபை கூட்டம் நடத்தி ஹீரோ ஆயிட்டார் என்கிறார். உண்மையில் கதையின் நாயகன்தானே ஹீரோ. எனக்கும் குடும்பம் உள்ளது. 8 கோடி பேர் தான் எனது குடும்பம் என்றார் கமல்ஹாசன்.