வரமுடியாவிட்டால் என்ன.. வாழ்த்துரை வழங்கிய நிதிஷ் குமார்! கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நெகிழ்ச்சி
திருவாரூர்: திமுக தலைவராக 50 ஆண்டுகள் கருணாநிதி இருந்துள்ளார். இது இந்தியாவில் எந்த மாநில கட்சி தலைவருக்கும் தேசிய கட்சி தலைவருக்கும் கிடைத்திராத மிகப்பெரிய பேறு. கருணாநிதி வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் அரும்பாடுபட்டவர் என்று நிதிஷ்குமார் உரையில் பாராட்டியுள்ளார்.
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக தரப்பில் அவரை வரவேற்க பிரமாண்டமான வரவேற்புகள் செய்யப்பட்டிருந்தன. அங்கே தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் அவர் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில், உடல் நிலையை காரணம் காட்டி கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க வர இயலாத சூழலை திமுக தலைமைக்கு நிதிஷ்குமார் தெரிவித்தார்.

எனினும் திட்டமிட்டபடி பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் வருகை தந்தார். நிதிஷ்குமார் விழாவில் பங்கேற்காவிட்டாலும் அவரது உரை வாசிக்கப்பட்டது. திமுக எம்.பி திருச்சி சிவா, நிதிஷ்குமாரின் உரையை வாசித்தார். நிதிஷ்குமார் உரையில் இடம் பெற்று இருந்ததாவது:- கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
கருணாநிதி தனது 14-வயதில் அரசியலில் அடி எடுத்து வைத்து அதன்பிறகு 80 ஆண்டுகள் தீவிர முழு நேர அரசியலில் ஈடுபட்டு இருந்தார். திமுக தலைவராக 50 ஆண்டுகள் இருந்துள்ளார். இது இந்தியாவில் எந்த மாநில கட்சி தலைவருக்கும் தேசிய கட்சி தலைவருக்கும் கிடைத்திராத மிகப்பெரிய பேறு. கருணாநிதி வாழ்நாள் முழுவதும் சமூக நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் அரும்பாடுபட்டவர்.
ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்களின் சமுதாய உரிமைகளுக்காகவும் பெண்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காகவும் அரும்பாடுபட்டவர். பிற்படுத்தப்பட்ட உரிமைகள் மறுக்கப்பட்ட ஏழைகளுக்க்காக உழைத்ததே அவருடைய புகழுக்கு மிக முக்கியமான காரணம். அவர் மாற்றம் ஏற்படுத்திய கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
சுய மரியாதை இயக்கத்தின் தலைவர் என்ற அடிப்படையில் 1980 ஆம் ஆண்டு முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற போது முதன் முதலாக பெண்களுக்கு குடும்ப சொத்தில் பங்கு உண்டு என்ற சரித்திர புகழ் மிக்க சட்டத்தை இயற்றினார். அதோடு, உள்ளாட்சி மன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பெண்கள் தற்சார்பு பெறும் வகையில் மகளிர் சுய உதவிகுழுக்களையும் உருவாக்கி பெருமை படைத்தார். தனது இளம் வயதில் திரைத்துறையில் புகழ்மிக்க வசனகர்த்தாவாக பரிணமித்த கருணாநிதி தமிழ் இலக்கியத்திற்கும் கலாசாரத்திற்கும் ஆற்றிய பங்கு அளப்பிடற்கரியது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications