திமுகவை திட்டிய பெண் நிர்வாகி.. நாம் தமிழர் கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. பதற்றம்-போலீஸ் அதிரடி
திருவாரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் பெண் நிர்வாகி காளியம்மாள் பேசி கொண்டிருந்தார். அவர் திமுக பற்றி சில கருத்துகளை தெரிவித்த நிலையில் அங்கிருந்த சிலர் பொதுக்கூட்டத்தை நோக்கி காலி மதுபாட்டில்களை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். மாநிலம் முழுவதும் கட்சியை வளர்க்கும் வகையில் நிர்வாகிகள் பல்வேறு பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சித்தமல்லி கடைத்தெருவில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

பெண் நிர்வாகி பேச்சு
இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசினார். அப்போது அவர் நாம் தமிழர் கட்சியின் கொள்கை, செயல்பாடு பற்றிய கருத்துகளை கூறினார். மேலும் அவர் ஆளும் திமுக அரசின் செயல்பாடு பற்றி கூறி விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காலி மதுப்பாட்டில்கள் வீச்சு
இதையடுத்து போலீசார் அந்த நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. அதோடு அந்த கும்பல் திடீரென்று பொதுக்கூட்ட மேடையை நோக்கி காலி மதுபாட்டில்களை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்துக்கு நாம் தமிழர் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

2 பேர் அதிரடி கைது
இதையடுத்து பாட்டில் வீசிய கும்பல் அங்கிருந்து ஓடியது. அதிர்ஷ்டவசமாக இந்த பாட்டில் வீச்சு சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும் பாட்டில் வீசியவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியினர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார் பாட்டில் வீசிவிட்டு தப்பியோடிய 2 பேரை மடக்கி பிடித்தனர்.

பின்னணியில் திமுக என குற்றச்சாட்டு
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பொதுக்கூட்டம் தடைப்பட்டது. அதன்பிறகு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதையடுத்து மீண்டும் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இந்த சம்பவத்தின் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

பெண் நிர்வாகி சொல்வது என்ன?
இதுபற்றி காளியம்மாள் கூறுகையில், ‛‛கருத்தை கருத்தால் எதிர்கொள்ள தெரியாதவர்களால் கல் வீசத்தான் முடியும். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இன்று வரை கேள்விக்குறி தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள் திமுக தொண்டர்கள். ஒரு பெண் மீது மதுபாட்டில் வீசும் கட்சி தான் பெண்ணியம், கருத்துரிமை பற்றி வாய் கிழிய பேசுகிறது. இதுவும் திராவிட மாடலில் தானே வருகிறது?'' என்றார். இதற்கு நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications