நெல் ஜெயராமனின் உடல் தகனம்.. கண்ணீருடன் விடைகொடுத்த மக்கள்!
நெல் ஜெயராமனின் உடலுக்கு ஊர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
திருவாரூர்: இயற்கை வேளாண் விவசாயி நெல் ஜெயராமனின் உடல், அவரின் சொந்த ஊரான கட்டிமேட்டில் தகனம் செய்யப்பட்டது.
இயற்கை விவசாயி பாரம்பரிய நெல் மீட்பாளர் நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவர் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் கட்டிமேடு கிராமத்தில் இன்று இறுதி ஊர்வலம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நெல் ஜெயராமன் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் முதன்மைச் சீடராக பார்க்கப்பட்டவர். இதுவரை 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைத்த பெருமை நெல் ஜெயராமனை சாரும்.
உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த இரண்டு வருட காலமாக நெல் ஜெயராமன் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று காலை 5.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்செய்தி அவரது சொந்த ஊரான கட்டிமேடு கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும் இன்று காலை நெல் ஜெயராமனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்னர், ஒரு மணி அளவில் நெல் ஜெயராமனின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, பி.ஆர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நெல் ஜெயராமனின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன், நெல் ஜெயராமனின் மகனின் கல்விச் செலவுயும் ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போது திருத்துறைப்பூண்டி கட்டிமேட்டில் நெல் ஜெயராமனின் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள், விவசாயிகள் எல்லோரும் அவருக்கு கண்ணீருடன் விடைகொடுத்தனர்.