பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்துகிறார்... மு.க. ஸ்டாலின் விமர்சனம்
Recommended Video
திருவாரூர்: பெரு நிறுவனங்களுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
மக்களிடம் செல்வோம், சொல்வோம், செல்வோம் என்ற முழக்கத்தை முன்வைத்து திமுக சார்பில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
'தமிழகத்தின் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம்' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பிப்ரவரி 17-ம் தேதி வரை ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவாரூர் அருகே புலிவலத்தில் ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கிராமம் தான் தேசத்தின் உயிர்நாடி, என்றும் கிராமங்களில் இருந்து தான் அரசியல் உருவாகிறது. மகாத்மா காந்தி கிராமத்தைத் தான் கோவில் என்று சொல்வார். கிராமம் இல்லாவிட்டால் நகரம் இல்லை; மாநகரங்கள் இல்லை என்றும் பேசினார்.
மனங்களை வெல்வோம்
மேலும், கிராமங்களே கோவில், தற்போது கோவிலுக்கு வந்ததை போல் உணர்கிறேன். மக்களை சந்திப்போம், மனங்களை வெல்வோம் என தனது பயணத்தை தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
குறைகளை சொல்வது யார்?
தமிழக வளர்ச்சிக்காக மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்கின்றனர். எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்வது மக்கள் தான். படித்தவர்கள் அதிகமாக வாக்கு செலுத்த வருவதில்லை. ஆனால் அவர்கள் தான் அதிகளவில் குறைகளை சொல்வார்கள் என ஸ்டாலின் கூறினார்.
ஸ்டாலின் குற்றச்சாட்டு
பல்ஸ் பார்ப்பதற்காகவே திட்டமிட்டு திருவாரூருக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாகசெயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாஜக மத்தியில் ஆட்சி வந்ததற்கு பிறகு சோதனைகள் அதிகமாகி விட்டன. பெரிய முதலாளிகளுக்காக பிரதமர் மோடி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.