கூரை வீடும் 3000 ரூபாயும் - திருத்துறைப்பூண்டி சிபிஐ வேட்பாளர் மாரிமுத்துவின் சொத்துமதிப்பு இது
திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்துவின் வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன.
திருவாரூர்: திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து புதன்கிழமையன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு கையில் இருக்கும் ரொக்கப்பண மதிப்பு ரூ.3000, வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன.
சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது பிரமாணப்பத்திரத்தில் சொத்துமதிப்புகளை குறிப்பிடுகின்றனர். பல வேட்பாளர்கள் 100 கோடி 200 கோடி சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளனர். கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு இடையே குடிசை வீட்டில் வசிக்கும் ஏழை வேட்பாளர்களும் இந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தனித் தொகுதி வேட்பாளர் மாரிமுத்து. கடுவுக்குடி என்ற ஊரில் வசிக்கும் இவருக்கு குடிசை வீடுதான் உள்ளது. இவரது தாயரும் மனைவி ஜெயசுதாவும் விவசாயக கூலி தொழில் செய்கின்றனர். மகனும், மகளும் பள்ளியில் படிக்கின்றனர். வீட்டில் கேஸ் அடுப்பு கிடையது. மண் அடுப்பில்தான் சமையல் செய்கின்றனர்.

வேட்பாளர் மாரிமுத்து
49 வயதான மாரிமுத்து 1994ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

3 பவுன் தங்கநகை
மாரிமுத்து நேற்று புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். அவருக்கு 75 சென்ட் நிலம் இருக்கிறது. அதன் மதிப்பு 1.75 லட்சம். வங்கிக் கணக்கில் ரூ.58,000 உள்ளது. அவரது கையில் ரொக்கமாக இருக்கும் பணம் ரூ.3000,அவரது மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன.

அதிமுக வேட்பாளர்
அதே நேரத்தில் இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் சுரேஷ்குமார் களம் காண்கிறார். இவரின் சொத்து மதிப்பு ஆவணங்களின்படி ரூ.20 கோடிக்கும் மேல் உள்ளது. கோடீஸ்வர வேட்பாளரை எதிர்த்து களம் காண்கிறார் ஏழை விவசாய வேட்பாளர் மாரிமுத்து.

வேலைவாய்ப்பு
திருத்துறைப்பூண்டி தொகுதியில் விவசாயிகள், நிலமற்ற தினக்கூலிகள் அதிகம் இருக்கின்றனர். தேர்தலில் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்தால், விவசாயிகள், தினக்கூலிகளுக்கு அரசு திட்டங்கள் சென்று சேர பாடுபடுவேன். தொகுதியின் மிகப்பெரிய பிரச்சினை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை. இதனால் இளைஞர்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்கின்றனர். வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவேன் என்றும் கூறியுள்ளார் சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து. வெற்றி வாய்ப்பு யாருக்கு கோடீஸ்வர வேட்பாளருக்கா, ஏழை விவசாயிக்கா என்று மே 2ஆம் தேதி தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications