விடிய விடிய திருவிழா..களைப்பில் தண்டவாளத்தில் தூங்கிய வாலிபர்கள்..ஏறி இறங்கிய தாம்பரம் ரயில்..சோகம்
திருவாரூர்: திருவாரூரில் கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மூன்று பேர், களைப்பில் அஜாக்கிரதையாக ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உப்பூர் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சித்திரை மாதத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருவதுண்டு. அந்த வகையில், நேற்று முன் தினம் மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு காவடி எடுத்தல், சாமி வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விடிய விடிய நடைபெற்ற இந்த கோவில் திருவிழாவைக் காண நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவ பக்தர்கள் பெருமளவில் வந்து இருந்தனர்.
அதேபோல், முத்துப்பேட்டை அருகே உள்ள உப்பூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த முருகதாஸ் என்பவரின் மகன் அருண் குமார் (வயது 17) கோபால சமுத்திரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் பரத் குமார் (வயது 17), நாகப்பட்டினம் மாவட்டம் மேல மருதூர் அருகே உள்ள தெற்கு பிடாரி என்ற கிராமத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் முருக பாண்டியன்(வயது 20) ஆகிய 3 இளைஞர்களும் கோவில் திருவிழாவை பார்க்க வந்து இருந்தனர்.
இரவு நடைபெற்ற காவடி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்த மூன்று பேரும் ஊர்வலம் முடிந்த பிறகு களைப்பில் கோவில் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். அப்போது அதிகாகாலை 3.30 மணியளவில் தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக வந்தது.

இரவில் திருவிழா ஊர்வலத்தில் கலந்து கொண்டதால் களைப்பில் அயர்ந்து தூங்கிய மூவரும் ரயில் வரும் போது எழுந்து இருக்கவில்லை. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில், செங்கோட்டைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பேரும் அடிபட்டனர். இதில் நிகழ்விடத்திலேயே அருண்குமார், முருகபாண்டியன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பரத்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரத்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கோவில் திருவிழாவில் பங்கேற்க வந்த இளைஞர்கள் மூன்று பேரும் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை தாம்பரத்தில் இருந்து தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கு செல்லும் இந்த ரயில் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் தனது சேவையை தொடங்கியது. புதிதாக இயக்கப்பட்டு வரும் ரயிலில் அடிபட்டு 3 வாலிபர்கள் பலியான சம்பவம் ரயில் பயணிகள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications