2 உயிர்களை கொத்தாக பறித்த கொள்ளிடம் ஆறு! சீர்காழியில் சோகம்.. இப்படியா நடக்கனும்?
மயிலாடுதுறை: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டிருப்பதால், டெல்டா மாவட்டங்களில் மக்கள் நீர் நிலைகளை கவனமாக அணுக வேண்டும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீர்காழியில் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சீர்காழியை அடுத்த பணங்காட்டான்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்களான சிபிராஜ், பரத்ராஜ் மற்றும் அருண் ஆகிய மூவரும் இன்று கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றிருக்கின்றனர். இதில் சிபிராஜ் மற்றும் பரத்ராஜ் என்பவர்கள் சகோதரர்கள். அருண் இவர்களின் உறவினராவார்.

சடலமாக மீட்பு
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக ஆழமான பகுதிக்கு இவர்கள் சென்றிருக்கிறார்கள். இதனையடுத்து கூச்சலிட்டு இருக்கின்றனர். கூச்சலை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பரத்ராஜ் என்பவரை மட்டும் காப்பாற்றியுள்ளனர். மீதமிருந்த இருவரை காப்பாற்ற முடியவில்லை. இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் நீண்ட தேடலுக்கு பிறகு இருவரையும் சடலமாக மீட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீர்வரத்து
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. எனவே, அணை முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது. எனவே டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளன. நீரின் வரத்து அதிகரிப்பதால், காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் இந்த துயர சம்பவம் நடந்திருக்கிறது.
டெல்டா மாவட்டம்
டெல்டா மாவட்டங்களில் நீர் நிலைகளில் மூழ்கி மக்கள் உயிரிழப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதேபோல தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் நீர்நிலையில் மூழ்கி உயிரிழந்திருந்தனர். அதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியில் வயதான நபர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார். தொடர் உயிரிழப்புகள் டெல்டா மாவட்ட மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
பொதுவாக நீரில் மூழ்கியவர்கள் உடனடியாக காப்பாற்றப்பட்டாலும், அவருக்கு முறையான முதலுதவி கிடைக்காததால் அவர்கள் உயிரிழப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
நீரில் மூழ்குபவர்கள் உயிரிழக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றது. அதாவது ஆழமற்ற பகுதியில் குளித்துக்கொண்டிருப்பார்கள், திடீரென நீரோட்டத்தில் ஆழமான பகுதிக்கு போய்விடுவார்கள். இதனால் பதற்றமும், பயமும் அதிகரிக்கும். ஆகவே பீதி ஏற்பட்டு மூச்சு பிடித்தல் ஏற்படும். மூச்சு பிடித்தக்கொண்டால் சுவாசிக்க முடியாது. ஏற்கெனவே உள்ளிழுக்கப்பட்ட ஆக்சிஜனை மூளை சேமித்து வைக்கும் முறைதான் இது. சுமார் ஒரு நிமிடம் வரை இது நீடிக்கலாம்.
இந்த காலத்தில் சேமித்து வைக்கப்பட்ட ஆக்ஸிஜன் மூளைக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் பீதியில் கைகளையும், கால்களையும் நாம் வேகமாக அசைப்போம். இதனால் ஆக்சிஜன் நீண்ட நேரத்திற்கு நமக்கு வராது. எனவே மீண்டும் சுவாசிக்க தொடங்குவோம். அந்த நேரத்தில் தண்ணீர் நுரையீரலுக்கு சென்று தேங்கும். இதனால் ஆக்சிஜன் அளவு குறைந்து இதயம் நின்றுவிடும். மூளைக்கு போக்கும் ரத்தம் நின்றுவிடும். எனவே மூளை செல்கள் அழிந்து உயிரிழப்பு ஏற்படும்.
உயிரிழப்பு காரணம்
இரண்டாவது வகையில், பீதியில் தண்ணீரை நாம் குடிக்க தொடங்குவோம். தண்ணீர் குரல்வளையை தொடும்போது குரல்வளை மூடிக்கொள்ளும். இதனால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலும் உயிரிழப்பு ஏற்படும்.
எனவே நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றிய உடன், தாமதிக்காமல் சிபிஆர் முதலுதவி கொடுக்கப்பட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் மூளைக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல முடியும். இதனால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பு இருக்கிறது.












Click it and Unblock the Notifications