திருவாரூரை கலக்கிய உதயநிதி..! குளம் தூர்வாரும் பணிகள் ஜரூர்..!
Recommended Video
திருவாரூர்: திருவாரூரில் திமுக இளைஞரணி சார்பாக குளம் தூர்வாரும் பணியை தொடங்கிவைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சென்னையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர, மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இளைஞரணியினர் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணியினர் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் குளம் தூர்வாரும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. திருவாசல் குளத்தில் தூர்வாரும் பணியை தொடங்கிவைக்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின், ஜே.சி.பி.இயந்திரத்தில் ஏறி அதை இயக்கத் தொடங்கினார். இதனால் உற்சாகமடைந்த திமுக இளைஞரணியினர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக இளைஞரணியினர் ஆர்வமுடன் தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை சீரமைத்து வருவதாகவும், இளைஞரணியில் தற்போது தாம் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை எனவும் தெரிவித்தார். மேலும், இதேபோல் இளைஞரணியில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக கூறினார்.
திருவாசலில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருவாரூர் செல்லும் வழியில் பள்ளி மாணவ, மாணவிகளை கண்டவுடன் காரை நிறுத்தச்சொல்லி அவர்களுக்கு கைகொடுக்கவும் உதயநிதி தவறவில்லை.












Click it and Unblock the Notifications