"நான் சொன்ன ஒரே வாரத்தில் உதயநிதியை அமைச்சர் ஆக்கினார்".. முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமா நெகிழ்ச்சி!
திருவாரூர்: உதயநிதியை அமைச்சராக்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலினிடம் தான் சொன்ன ஒரே வாரத்தில் அவரை அமைச்சர் ஆக்கினார் எனக் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலினின் தாய்மாமாவான தட்சிணாமூர்த்தி.
தமிழர் பண்பாட்டில் தாய்மாமன் உறவு நெகிழ்ச்சிகரமானது. தாயுடன் உடன்பிறந்த சகோதரனுடன் உறவு பன்னெடுங்காலத்துக்குத் தொடரும் வகையில், அத்தனை நிகழ்வுகளிலும் தாய்மாமனை முன்னிறுத்தும் சம்பிரதாயம் தமிழர் கலாச்சாரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. எவ்வவு பெரிய உயரங்களுக்குச் சென்றாலும், தாய்மாமன் உறவு மதித்துப் பேணப்பட்டு வருகிறது. அந்தவகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது தாய்மாமா மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளின் சொந்த ஊர். இங்குதான் முதல்வர் ஸ்டாலின் தாய்மாமன் இருக்கிறார். தயாளு அம்மாளின் அண்ணனான கோ.தட்சிணாமூர்த்தி, தனது சகோதரியின் பிள்ளைகள் அனைவரின் மீதும் மிகுந்த பாசம் கொண்டவர். திருவாரூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக இருந்தவர். ஸ்டாலின் சிறு வயதில் சில காலம் தாய்மாமாவின் வீட்டில் வசித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையேயான பாசப்பிணைப்பு உருக்கமானது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் மாவட்டத்திற்கு எப்போது சுற்றுப்பயணம் சென்றாலும், அவரது தாய்மாமா தட்சிணாமூர்த்தியைச் சென்று சந்தித்து வருவார். தொடர் பணிகள் காரணமாக ஸ்டாலின், அவரது தாய்மாமா வீட்டுக்குச் செல்லவில்லை என்றால் கூட, வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் அவரது தாய்மாமா தானே, ஸ்டாலின் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து பாசத்தோடு விசாரித்துவிட்டு வருவாராம்.
இந்நிலையில், இன்று தனது நூறாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் தட்சிணாமூர்த்தி. 100வது பிறந்தநாளையொட்டி, பேரளத்திற்குச் சென்று, தனது தாய்மாமாவின் பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின். ஆனால், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கடுமையான உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி வெளியூர் பயணத்தை தவிர்த்துள்ளார். இன்று போனில் தனது தாய்மாமாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்து, அவரது ஆசி பெற்றுள்ளார் ஸ்டாலின்.
எனினும், திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர், ஸ்டாலினின் தாய்மாமா வீட்டிற்கு சென்று அவரது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடினர். அவருக்கு ஆளுயர மாலை அணிவித்து, பிரமாண்ட கேக் வெட்டச் செய்து, மகிழ்வித்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தட்சிணாமூர்த்தி.
அப்போது பேசிய அவர், "முதல்வர் ஸ்டாலின், அவரது அண்ணன் முக அழகிரி, தங்கை செல்வி ஆகியோர் அழைத்து வாழ்த்து தெரிவித்தனர். திருவாரூர் மாவட்ட திமுகவினர் என்னை மகிழ்ச்சியில் திணறடித்து விட்டனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வட இந்தியாவிலும் திமுகவிற்கு மதிப்பை தேடித் தந்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு. நான் 1938ல் அரசியலுக்கு வந்தவன். எனது மருமகனும், முதல்வருமான ஸ்டாலின் இன்னும் சிறப்பாக வாழவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
எனது 99வது பிறந்தநாளின்போது வாழ்த்துக் கூறிய முதல்வர் ஸ்டாலினிடம் சொன்னேன். உதயநிதியை அமைச்சராக்குங்கள் என்று சொன்னேன். ஒரே வாரத்தில் உதயநிதியை அமைச்சராக்கினார் முதல்வர் ஸ்டாலின். எனது பேச்சுக்காக அவரை அமைச்சர் ஆக்கினார் என்று சொல்லவில்லை. ஆனால், நான் சொன்ன ஒரே வாரத்தில் அமைச்சர் ஆக்கினார்." என நெகிழ்ந்து போய் பேசினார் தட்சிணாமூர்த்தி.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என பல முறை தகவல்கள் வெளியான நிலையில், அவர் அமைச்சராக்கப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் அமைச்சராகப் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். அதற்கு முன்னதாக, முதல்வரிடம் தான் பேசும்போது உதயநிதியை அமைச்சராக்குங்கள் எனக் கூறியதாக தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications