சார் வீடு வாடகைக்கு இருக்கா?.. உள்ளே சென்ற மர்ம நபர் செய்தது என்ன.. திருவாரூரில் பரபரப்பு
திருவாரூர்: திருவாரூர் அருகே வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து வயதான தம்பதிக்கு விஷம் கொடுத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சி விஷ்ணுத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் செல்லப்பிள்ளை. அவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று காலியாக இருப்பதால் வீட்டின் வெளியே டூலெட் போர்டை மாட்டி வைத்திருந்தனர்.
இதை பார்த்து விட்டு 5 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் வந்து வீடு கேட்டுள்ளார். இந்த நிலையில் அவரே நேற்று இரவும் செல்லப்பிள்ளை வீட்டுக்கு வந்துள்ளார்.

வரும் முன் காப்போம்
அப்போது உடல்நலக்குறைவால் வீட்டில் சகுந்தலா படுத்திருந்தார். உடனே என்னம்மா உடம்பு சரியில்லையா. இந்த மருந்தை சாப்பிடுங்கள், குணமாகிடும் என அவருக்கு கொடுத்துள்ளார். அதுபோல் செல்லப்பிள்ளைக்கு வரும் முன் காப்போம் என கூறி அதே மருந்தை கொடுத்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில்
இதையடுத்து இருவரும் மயங்கி விழுந்தவுடன் வீட்டில் இருந்த 6 சவரன் நகையை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள இருவரும் வெளியே வராததை அடுத்து சந்தேகத்தின்பேரில் உள்ளே சென்று பார்த்தனர்.

சகுந்தலா பலி
அப்போது அரை மயக்க நிலையில் இருந்த செல்லப்பிள்ளை நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா உயிரிழந்தார். செல்லப்பிள்ளை சிகிச்சை பெற்று வருகிறார்.

4 பேர் நோட்டம்
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், மோப்ப நாயை கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், செல்லப்பிள்ளையும் சகுந்தலாவும் தனியாக வசிப்பதை 4 பேராக சேர்ந்து கண்காணித்துள்ளனர்.

கழுத்தில் உள்ள நகைகள்
அவர்கள் வீட்டுக்கு யார் வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள், உதவிக்கு யாராவது வருகிறார்களா உள்ளிட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதையடுத்து வீடு கேட்பது போல் சென்று வீட்டில் இருக்கும் பொருட்கள், சகுந்தலாவின் கழுத்தில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர்.

கசாயம்
பிறகு அவர்கள் இருவருக்கும் காய்ச்சல் என தெரிந்தே நேற்று இரவு வீட்டுக்குள் சென்று அரசு வழங்கும் கசாயத்தில் விஷத்தை கலக்கி, மருந்து என கூறி குடிக்க வைத்துள்ளனர். பின்னர் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications