நீதிமன்றம் திட்டியும் கேட்கலையே.. திருவாரூரில் தவெக தொண்டர்கள் விதிமீறல்! தீர்வு என்ன?
திருவாரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று திருவாரூர், நாகையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக திருச்சியிருந்து திருவாரூருக்கு சாலை மார்க்கமாக சென்ற அவரை, அவரது ரசிகர்கள் பைக்குகளில் பின்தொடர்ந்துள்ளனர். நீதிமன்றம் அறிவுறுத்தியும் இதுபோன்று விதிமீறல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இருப்பதால் இந்த முறை தேர்தல் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில் தேர்தலை ஒட்டி கடந்த 13ஆம் தேதி திருச்சியில் விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

அரியலூரில் பிரச்சாரம் செய்த விஜய், நள்ளிரவு நேரமானதால் பெரம்பலூர் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார். ஒரே நாளில் மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாததால் ஏற்கெனவே திட்டமிட்டு இருந்த சுற்றுப்பயணம் மாற்றி அமைக்கப்பட்டது.
முன்னதாக விஜய் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகவும், எதிர் கட்சிகளுக்கு அல்லது வேறு சில அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படாத நிபந்தனைகளையும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளையும் விதித்து அனுமதி மறுப்பதாக தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறை சார்பில் ஆஜராகி இருந்த அரசு தலைமை கூடுதல் வழக்கறிஞர், நிபந்தனைகளுடன் அனைத்து பகுதிகளிலும் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருவதாக விளக்கமளித்தார். ஆனால், தொண்டர்கள் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி, அதற்கான ஆதாரமாக சில வீடியோக்களையும் நீதிபதியும் முன்னால் சமர்ப்பித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் கூட்டத்திற்கு வர வேண்டாம் என எல்லோருக்கும் முன்மாதிரியாக விஜய் தெரிவிக்கலாமே என்றும், நிகழ்ச்சிக்கு வரும் தொண்டர்களை ஏற்பாடு செய்பவர்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது. அதேபோல பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்களிடமிருந்து உரிய இழப்பு தொகையை வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்திருந்தார். நீதிமன்றம் இந்த வழக்கை கராராக அணுகியிருந்த நிலையில், சுற்றுப்பயணம் தொடர்பாக தவெக தலைமை முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதாவது, விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும் நிகழ்ச்சி முடித்துவிட்டு செல்லும்போதும் அவரது வாகனத்தை தொண்டர்கள் தொடர வேண்டாம் என்றும், பொதுமக்கள் சந்திப்பு நடைபெறும் இடத்தின் அருகில், அரசு, தனியார் கட்டிடங்கள், மரங்கள், மின் விளக்குகள், கம்பங்கள், வாகனங்கள், கொடி கம்பங்கள் மற்றும் சிலைகள் இருந்தால் அதன் அருகில் செல்வதையும், அதன் மீது ஏறுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
அதேபோல கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், பள்ளி சிறுவர்கள், மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், காவல்துறை விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து இன்று திருவாரூர், நாகையில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாகை புதூர் அண்ணா சிலை சந்திப்பில் காலை 11 மணிக்கும், திருவாரூர் நகராட்சி அலுவலகம் அருகே தெற்கு வீதியில் பிற்பகல் 3 மணிக்கும் பொதுமக்கள் மத்தியில் விஜய் உரையாற்ற இருக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவாரூர் செல்கிறார். தற்போது விஜய் திருவாரூர் சென்று வரும் நிலையில், அவரது வாகனத்தை அவரது ரசிகர்கள் பலர் பைக்குகளில் பின் தொடர்கின்றனர். நீதிமன்றம் அவ்வளவு அறிவுறுத்தியும், கட்சி தலைமை அறிவுறுத்தலுக்கு பின்னரும் ரசிகர்கள் இவ்வாறு பைக்குகளில் பாதுகாப்பற்ற முறையில் பின் தொடர்வது பொதுமக்களிடையே முக சுளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர் அறிவுறுத்தல்களுக்கு பின்னரும் இப்படி விதிமீறுபவர்களை கட்டுப்படுத்த தீர்வுதான் என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications