திருப்பதி ஏழுமலையான் கோவில் மாசி தெப்ப உற்சவம்..ஆர்ஜித சேவைகள் ரத்து..புதிய முறையில் லட்டு பிரசாதம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதத்தை பக்தர்கள் கொண்டு செல்ல, பனை மர ஓலையிலான கூடைகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் மாசி தெப்ப உற்சவம் மார்ச் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. லட்டு பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குவதற்கு பழங்கால முறைப்படி கூடைகளில் விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
பனை ஓலைகளில் செய்த கூடைகள், தட்டுக்களில் பொருட்களை கொண்டு சென்றால் அதன் சுவை மாறாமல் இருக்கும். பழங்காலங்களில் நம்முடைய வீடுகளில் பனை ஓலை கொட்டான்கள் அதிகம் இருக்கும். கேரி பேக் எனப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகரித்த பிறகு பனை ஓலைக்கொட்டான்களின் பயன்பாடு படிப்படியாகக் குறைந்து போனது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பனை ஓலைக்கொட்டான்களில்தான் சில்லு கருப்பட்டி உள்ளிட்ட பல பிரசாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கோவில் அர்ச்சனைக்கு கொண்டு செல்லப்படும் பொருட்களையும் பனை ஓலை கொட்டான்களில் கொண்டு செல்கின்றனர். அதுபோல பனை ஓலை கொட்டான்களை பயன்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
ஏழுமலையானை மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து விட்டு வரும் பக்தர்கள் லட்டு கவுண்டர்களில் சென்று பிரசாதத்தை பெற்று செல்வார்கள். தங்களுக்கு மட்டுமல்லாது உறவினர்களுக்கும் சேர்த்து லட்டு வாங்கி வருவார்கள். இப்போது லட்டு கவுண்டர்களில் எத்தனை லட்டு வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பைகளை தனியாக காசு கொடுத்து வாங்கிக்கொள்ள வேண்டும். தேவஸ்தான நிர்வாகம் சார்பில் மறு சுழற்சி செய்யக்கூடிய பிளாஸ்டிக் பைகள், துணிப்பைகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறது. 5 ரூபாய், 10 ரூபாய்களில் பைகள் கிடைக்கின்றன.
இனி பக்தர்கள் லட்டு பிரசாதம் வாங்கி செல்வதற்காக ஓலை கூடைகளை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பனை ஓலை, தென்னை ஓலை ஆகியவற்றால் தயார் செய்யப்பட்ட ஓலைப் பெட்டிகளை கவுண்டர்கள் அமைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
10 ரூபாய், 15 ரூபாய், 20 ரூபாய் ஆகிய விலைகளில் மூன்று அளவுகளில் ஓலை பெட்டிகளை பக்தர்கள் லட்டு வாங்கி செல்ல விற்பனை செய்யவும் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் சுற்றுச்சூழல் காப்பாற்றப்படும் என்றும் கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதனிடையே திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023 ம் ஆண்டிற்கான வருடாந்திர தெப்ப உற்சவம் மார்ச் 03 ம் தேதி துவங்கி, மார்ச் 07 ம் தேதி வரையிலான 5 நாட்கள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் சுவாமி புஷ்கரணியில் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். தெப்ப உற்சவத்தின் போது தினமும் மாலையில் மலையப்ப சுவாமி பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுவார். இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி புஷ்கரணியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உலா வந்து காட்சி தருவார். தெப்ப திருவிழாவை காண ஏராளமானோர் திருமலைக்கு வருவார்கள். மார்ச் மாதம் மட்டும் கட்டண விரைவு தரிசன டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது.
மாசி தெப்ப திருவிழா வரும் மார்ச் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. தெப்ப உற்சவத்தின் முதல் நாளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீ ராமர் அலங்காரத்தில் சீதா தேவி மற்றும் லட்சுமணருடன் தெப்பத்தில் மிதந்து வந்து காட்சி தருவார். இரண்டாம் நாளில் ஸ்ரீ கிருஷ்ண அலங்காரத்தில் ருக்மணியுடன் வலம் வரும் மலையப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தெப்ப உற்சவத்தின் மூன்றாவது நாளில் முதலில் மூன்று முறையும், பிறகு ஐந்து முறையும் தெப்பத்தில் மலையப்ப சுவாமி, தேவியர்களுடன் வலம் வருவார். இறுதி நாளில் ஏழு முறை தெப்பத்தில் வலம் வந்து காட்சி தருவார். மாசி பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியில் தெப்பத்தில் ஸ்ரீதேவி - பூதேவியுடன் மலையப்ப சுவாமி உலா வரும் காட்சி கண்கொள்ளக் காட்சியாக இருக்கும்.
வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதை அடுத்து மார்ச் 03 மற்றும் 04 ஆகிய தேதிகளில் சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், மார்ச் 05, 06 மற்றும் 07 ஆகிய நாட்களில் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்காரம் உள்ளிட்ட சேவைகளும் ரத்து செய்யப்படுவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications