திருப்பதி லட்டு விநியோக கவுன்ட்டரில் தீ விபத்து.. கரும்புகை வெளியேறியதால் அலறியடித்து ஓடிய பக்தர்கள்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள லட்டு பிரசாதம் வழங்கும் கவுன்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 47வது கவுண்ட்டரில் தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை எழுந்தது. லட்டு விநியோக கவுன்டரில் இருந்து கரும்புகை வெளியானதை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
ஏழுமலையான் கோவிலில் பிரசாத லட்டு விநியோகம் செய்யும் வளாகத்தில் உள்ள 47 ஆம் நம்பர் கவுன்ட்டரில் யு.பி.எஸ்ஸில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து உடனடியாக வந்த தேவஸ்தான மின்துறை ஊழியர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி யு.பி.எஸ் இணைப்பை துண்டித்தனர்.

மேலும், திருப்பதி கோவில் பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு, தீயை உடனடியாக அணைத்தனர். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
லட்டு பிரசாதம் வழங்கும் கவுண்ட்டரில் திடீரென கரும்புகை எழுந்ததால், லட்டு வாங்க வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்தச் சம்பவத்தால் திருப்பதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மையில், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வுக்கான இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டபோது, ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இன்று திருப்பதியில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.












Click it and Unblock the Notifications