திருப்பதி கோவிலுக்கு போறீங்களா? தொடர் நிலச்சரிவால் பக்தர்களுக்கு வந்த முக்கிய அறிவிப்பு
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கல், மண் உள்ளிட்டவை மலையில் இருந்து சரிந்து வருவதால் பக்தர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினமும் பக்தர்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் எனக்கூறுவது உண்டு.

இதன் பின்னணியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை வைத்து தான் கூறுகின்றனர். மேலும் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் அழைக்கப்படுகிறார்.
தினமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். ஆந்திரா, தமிழ்நாடு மட்டுமின்றி நம் நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் திருப்பதி மலைப்பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் ஆங்காங்கே கடந்த 3 நாட்களாக நிலச்சரிவு என்பது ஏற்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்லும் மலைப்பாதையில் இன்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது மலைப்பாதையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து கற்கள், மண் உள்ளிட்டவை சரிந்து சாலையில் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்தவுடன் தேவஸ்தான பொறியியல் துறையினர், பணியாளர்கள் வந்து மாலைப்பாதையை சரிசெய்தனர்.
இதையடுத்து போக்குவரத்து மீண்டும் சீரானது. தற்போது அடிக்கடி நிலச்சரிவு என்பது ஏற்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக பயணிக்கும் பக்தர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications