திருப்பதி தரிசன டிக்கெட்.. இனி வாட்ஸ் அப் மூலம் எளியதாக பெறலாம்! பக்தர்களே நோட் பண்ணுங்க
சென்னை: திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசிக்க நேரில் சென்று டிக்கெட் வாங்க தேவையில்லை. வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளும் வசதியை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.
வாட்ஸ்-அப் மூலம் பெறப்படும் டிக்கெட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு, தரிசன கவுண்டரில் காண்பித்து தரிசனம் செய்யலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.

டிக்கெட்டை பெறுவது எப்படி?
டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் பெற, 95523 00009 என் அரசு வாட்ஸ்அப் எண்ணுக்கு Hai' என்று குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். விருப்பங்களை தேர்ந்தெடுத்து விவரங்கள் வழங்கியவுடன் டிஜிட்டல் ரொக்கப்பணம் செலுத்தும் கேட்வே' உடனடியாக தோன்றும். பணம் செலுத்திய உடன், டிக்கெட் வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பப்படும். டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு கோயில்களுக்கு செல்லலாம்.
மன மித்ரா என்ற பெயரில் வாட்ஸ்அப் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கும் திட்டத்தை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ்தான் தற்போது திருப்பதி கோயில் தரிசனத்திற்கான டிக்கெட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
திருப்பதி கோயில்
உலகின் மிகவும் பிரசித்திப்பெற்ற திருத்தலங்களில் திருப்பதியும் ஒன்று. கடந்த 2024ம் ஆண்டு மட்டும் இந்த கோயிலுக்கு சுமார் 2.55 கோடி பக்தர்கள் வந்து சென்றிருக்கின்றனர். சராசரியாக ஒரு நாளைக்கு 70,000 பக்தர்கள் வந்து சென்றிருக்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் காணிக்கையாக ரூ.1,365 கோடி வந்திருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த கோயிலுக்கும் இவ்வளவு பக்தர்கள் வருவதில்லை. அந்த வகையில், திருப்பதி எப்போதும் பக்தர்களின் மனம் கவர்ந்த கோயிலாக இருக்கிறது.
உயிரிழப்புகள்
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும், இதனால் சில விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன. குறிப்பாக கடந்த ஜன.9ம் தேதி திருப்பதி கோயிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களில் 6 பேர், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இதில் 2 பெண்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜன.10ம் தேதி சொர்கவாசல் திறக்கப்பட்டது. இதனை காண பக்தர்கள் அதிக அளவில் கூடியதால் இந்த துயர சம்பவம் நடத்திருக்கிறது.
இனியும் இதுபோன்ற நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் வாட்ஸ்-அப் மூலமாக டிக்கெட் பெறும் வசதி. ஆந்திர அரசின் இந்த முயற்சிக்கு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications