திருப்பதி ஏழுமலையான் கோயில் சுற்று வட்டாரம் இந்துக்களுக்கு மட்டுமே.. மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து
திருப்பதி: திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஹிந்துக்கள் மட்டுமே கடை நடத்த அனுமதிக்க தேவஸ்தானம் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அங்குள்ள மும்தாஜ் ஹோட்டலுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள வருகை புரிகின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம். தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள், டாலர்களை பக்தர்கள் காணிக்கைாக செலுத்துவது வழக்கம்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் புனிதமாகவும், பெருமாளின் அருள் பெற்றதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த பிரச்னை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, திருப்பதியில் பரிகார பூஜைகள் செய்யப்பட்டன.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விரதமிருந்து திருப்பதிக்கு நேரில் சென்று பரிகார பூஜைகளைச் செய்தார். முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு மோசடி செய்யப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் பூதாகரமாக வெடித்தது.
இதைத்தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அறக்கட்டளை நிர்வாகிகள் சமீபத்தில் மாற்றப்பட்டனர். அந்த அறக்கட்டளை பி.ஆர்.நாயுடு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் முதல் அறங்காவலர் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாற்று மதத்தினர் விஆர்எஸ் அல்லது வேறு துறைகளுக்கு டிரான்ஸ்பர் பெறும்படி தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், திருமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஹிந்துக்கள் மட்டுமே கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.ஆர். நாயுடு கூறியுள்ளதாவது: திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை அறங்காவலர் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியின்போது சுற்றுலாத் துறை வளர்ச்சிக்காக தேவலோகம் திட்டத்துக்காக 20 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த நிலத்தை, முந்தைய ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் ஆட்சியில் மும்தாஜ் என்ற பெயரில் ஹோட்டல் நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த ஹோட்சல் சட்ட வீதிகளை மீறியதாகும். எனவே, அந்த ஹோட்டலின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹிந்து கோயில்களில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். மாற்று மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது.
ஹிந்து மக்கள் கோரிக்கைகளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தேவஸ்தானம் கோயில்களில் பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு துறைகளில் பணியமர்த்தப்படுவர். அல்லது விருப்ப ஓய்வும் பெறலாம். வருவாய்த் துறை, நகராட்சி, மாநகராட்சிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.
அதேபோல, திருமலையில் அரசியல் கருத்துகள் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் 12 கோயில்கள் மற்றும் துணை கோயில்களையும், அவற்றில் 14 ஆயிரம் ஊழியர்களையும் நிர்வகித்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications