திருப்பதியில் உகாதி பண்டிகை கோலாகலம்! நேற்று ஒரே நாளில் குவிந்த பக்தர்கள்!
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றைய தினம் உகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி 10 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கோவில் ஜொலி ஜொலித்தது.
தெலுங்கு நாட்காட்டி, பஞ்சாங்கத்தின்படி அமாவாசையின் மறுநாள் புதிய மாதம் பிறக்கிறது. இதனால் பங்குனி மாத அமாவாசையின் மறுநாள் ஆண்டுதோறும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் தெலுங்கு வருட பிறப்பு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீமலையப்பஸ்வாமி, விஷ்வக்சேனர் அலங்காரத்துடன் விமான பிரகாரம், கொடி மரத்தை சுற்றி ஊர்வலமாக கோயிலுக்குள் சென்றனர்.
தங்க மண்டபத்தில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்கள் வீற்றிருந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் சேனாதிபதியான விஷ்வக்சேனர் வீற்றிருந்தார்.
அதன் பின்னர் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நெய்வேத்தியம், தீப தூப ஆராதனைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் கோயிலில் 10 டன் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தெலுங்கு வருடபிறப்பான நேற்றைய தினம் திருப்பதிக்கு 57,272 பக்தர்கள் வந்தனர். அவர்களில் 23,842 பேர் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் காணிக்கை ரூ 3.37 கோடியாகும். திருமலையில் உள்ள வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸில் 31 காத்திருப்பு அறைகளும் நிரம்பி சிலாதோரணம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.












Click it and Unblock the Notifications