பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை! நள்ளிரவில் புகுந்து மர்மநபர்கள் வெறிச்செயல்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணம் ஆகி, மகன் கோவையிலும், மகள் சென்னிமலையிலும் வசித்து வருகின்றனர். தம்பதியர் கிராமத்தில் விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள மகன் செந்தில் குமார், தனது தாய், தந்தையர் இருக்கும் பண்ணை வீட்டிற்கு நேற்று வந்திருந்தார். இவர்கள் மூவரும் பண்ணை வீட்டில் தங்கினர்.
இந்த நிலையில் இந்த தோட்டத்திற்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் முதலில் தெய்வசிகாமணியை வெட்டியதாக தெரிகிறது. அப்போது அதிர்ச்சி அடைந்த அலமேலுவும் செந்தில் குமாரும் தெய்வசிகாமணியை காப்பாற்ற முயன்றனர். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்றுள்ளனர். மூவரையும் கத்தி, இரும்பு ராடால் குத்திக் கொன்றுள்ளனர்.
இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு செல்ல அந்த ஊரை சேர்ந்த சலவைத் தொழிலாளி இன்று அதிகாலை வந்துவிடுமாறு தெய்வசிகாமணி கூறியிருந்தாராம். அதன்பேரில் அவர் இன்று காலை அவர்களின் வீட்டுக்கு வந்து பார்த்த போது 3 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வீட்டிலிருந்து 8 பவுன் மதிப்பிலான நகையை திருடி சென்றுவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த கொலை நகைக்காக நடந்ததா, இல்லை வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆராய்ந்து வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு யாருடனாவது முன்விரோதம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்.
மூவரின் சடலத்தை பார்த்து செந்தில் குமாரின் மனைவி கதறி அழுத காட்சி பார்ப்போர் நெஞ்சை கரைய வைத்தது. செந்தில் குமாருக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்குமாறு செந்தில் குமார் மனைவி திருப்பூர் எஸ்பியிடம் வாக்குவாதம் செய்தார்.












Click it and Unblock the Notifications