"எங்க திருப்பூர்" ஓடும் ரயிலில் பயணிகளிடம் போதையில் ரகளை.. இளைஞர்களை மொத்தமாக அள்ளிய போலீஸ்
திருப்பூர்: எங்க திருப்பூர்.. இங்க நாங்க மட்டும் தான் பேசனும்.. என ஓடும் ரயிலில் பயணிகளிடம் போதையில் ரகளை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர் மணிகண்டன். கோவையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் சென்னை - ஆழப்புழா ரயிலில் முன்பதிவு செய்து நேற்று முன் தினம் சென்றார். ரயிலின் எஸ் 10 பெட்டியில் மணிகண்டன் குடும்பத்தினர் பயணம் செய்தார்.

இந்த ரயில் அதிகாலை ஈரோடு - திருப்பூர் ரயில் நிலையத்திற்கு இடையே சென்று கொண்டிருந்த போது, ரயில் பெட்டிக்குள் சில இளைஞர்கள் புகை பிடித்துக் கொண்டும், சத்தமாக செல்போனில் பாட்டு பாடிக்கொண்டும் பயணிகளுக்கு இடையூறு செய்து வந்துள்ளனர். இதனால், மணிகண்டன் அந்த இளைஞர்களை தட்டி கேட்டுள்ளார்.
எங்க ஊரு, எங்க ஸ்டேஷன்: அப்போது, மணிகண்டனை தரக்குறைவாக திட்டியதோடு, இது எங்க ஊரு, எங்க ஸ்டேஷன்.. நாங்க மட்டும்தான் பேசனும்.. வெளியே வந்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மணிகண்டனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. திருப்பூர் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்ததும் அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர்.
போலீசில் புகார்: ரயில் பயணியிடம் இளைஞர்கள் போதையில் தகராறு செய்த காட்சிகளை சக பயணிகள் வீடியோ எடுத்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கிடையே ரயில் நிலையத்தில் தன்னிடம் தகராறு செய்த இளைஞர்கள் மீது பாதிக்கப்பட்ட மணிகண்டன் திருப்பூர் ரயில் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் 2 பேர் கைது: வீடியோ காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிரமாக தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் பாளையக்காட்டை சேர்ந்த அசோக் (வயது 18), 17 வயது சிறுவன் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 2 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில், பயணியிடம் தகராறில் ஈடுபட்ட சுடலைராஜ்(18), கோல்டன் நகரை சேர்ந்த கரண்(23) ஆகிய 2 பேரையும் திருப்பூர் ரயில்வே போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இரவு நேர ரோந்து போலீஸ்: ரயிலில் பயணியிடம் இளைஞர்கள் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரயிலில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ரயில்களில் இரவு நேர ரோந்துக்கு போலீசார் அதிகரிக்கப்பட்டு பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க அனைத்து ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பயணி பேட்டி: முன்னதாக ரயிலில் பாதிப்புக்குள்ளான ராமா என்ற பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து கூறுகையில், "சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரயிலில் நானும் எனது தம்பியும் வந்தோம். எஸ் 9 பெட்டியில் நான் ரிசர்வ் செய்து இருந்தேன். ரயில் ஈரோடு வந்த போது சில பசங்க ஏறினாங்க.. ரயிலில் ஏறியதில் இருந்து ஒரே கலாட்டாவில் ஈடுபட்டனர்.
சிகரெட் பிடித்துக்கொண்டு இடைஞ்சல் செய்தனர். எனது தம்பி.. ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்பதற்குள் அவனை அடிக்க ஆரம்பித்தனர். அப்போ என்ன பண்ணுறதுன்னே தெரியல.. டிடிஆரும் வரவில்லை. போலீசாரும் வரவில்லை. திருப்பூரில் ரொம்ப அசிங்கமாக பேசினார்கள். எனது தம்பியையும் தாக்கினார்கள். யாராவது வந்து கேட்பார்கள் என்று பார்த்தேன். அதுவும் இல்லை.
திருப்பூரில் இறங்கி கொலை மிரட்டல் விடுத்தனர். கோவையில் இறங்கி வந்த பிறகுதான் புகார் கொடுத்தோம். இளைஞர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தனர். சக பயணிகள் யாருமே உதவிக்கு வரவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications