“என் சாவுக்கு காரணம் திமுகவினர்தான்.. ரொம்ப டார்ச்சர் பண்றாங்க".. அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை
திருப்பூர்: "திமுக நிர்வாகிகள் என்னை டார்ச்சர் செய்கிறார்கள்.. இதனால், மன உளைச்சலில் என் உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன்" என அதிமுக ஐடிவிங் நிர்வாகி ஆடியோவில் பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சமபவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் குண்டடம் மேற்கு ஒன்றியம் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் செல்வானந்தம். இவரது மனைவி முத்துபிரியா நவநாரி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். செல்வானந்தம் கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்காச்சோளம் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், தொழில் நஷ்டம் ஏற்பட்ட காரணமாக பணத்தை தாமதமாக செலுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ பவித்ரா ட்ரேடர்ஸ் உரிமையாளர் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர், அதிமுக ஐடி விங் நிர்வாகி செல்வானந்தம் 80 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று வீட்டில் வந்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
அவர்கள் இருவருக்கும் ஆதரவாக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் ஆகியோர் செல்வானந்தத்தை மிரட்டி 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என மொத்தம் 85 லட்சம் ரூபாய்க்கு காசோலையை எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக திமுக நிர்வாகிகள் செல்வானந்தத்தை மிரட்டி வந்ததால் மன உளைச்சலில் அடைந்த செல்வானந்தம் தனது உயிருக்கு முழு காரணம் திமுக நிர்வாகிகளான மணிமாறன் மற்றும் முத்துக்குமார் என்று ஆடியோ வெளியிட்டு திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்து உள்ள குண்டடம் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் விஷ மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற உறவினர்கள், செல்வானந்தத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்கொலை செய்துகொண்ட செல்வானந்தத்தின் செல்போனை ஆய்வு செய்த அவரது மனைவி முத்து பிரியா, அதில் இருந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். செல்வானந்தம், விஷ தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக தனது ஐ-போனில் இருந்து மற்றொரு போனுக்கு ஒரு ஆடியோவைப் பேசி அனுப்பியிருந்தார்.
அந்த ஆடியோவில், "மதுரை மண்டல திமுக பொறுப்பாளர் பி.டி. மணிமாறன் மற்றும் மதுரை தெற்கு மீனவர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் இருவரும் சேர்ந்து, மக்காச்சோள வியாபாரத்தில் என்னை ஏமாற்றிவிட்டனர். மேலும், பணம் தரவேண்டும் என்று காவல்துறையினர் மூலம் அழுத்தம் கொடுத்து எழுதி வாங்கிக் கொண்டனர். இதுவரை 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், தொடர் மிரட்டல்கள் விடுத்தும், அவ்வப்போது என்னை அவமானப்படுத்தியும், பணம் கேட்டு மிரட்டினர்.
அதேபோல், ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும், எனக்கு அனுப்பப்படாத மக்காச்சோளத்துக்கு போலியாக பில் தயாரித்து, 40 லட்சம் ரூபாய் மற்றும் 45 லட்சம் ரூபாய் என இரண்டு காசோலைகளைப் பெற்றுக்கொண்டு, எனது மனைவி பெயரில் உள்ள ஆயில் மில் மீது மோசடி வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி வந்தார். தொழிலில் பலர் என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்போது உயிரை விடும் நிலைக்கு வந்துவிட்டேன்" என்று பேசி உள்ளார்.
மேலும், மற்றோரு ஆடியோவில், "என்னை ரொம்ப கேவலப்படுத்திவிட்டனர். நான் போனதுக்கு அப்புறம் என்னோட குடும்பத்தை யாரும் துன்பப்படுத்தாதீங்கப்பா.... நான் போனதே போதும், தயவுசெஞ்சு யாரும் யாரையும் ஏமாத்த வேண்டாம்.. என்னால முடியல..." என்று கண்ணீரோடு செல்வானந்தம் பேசி உள்ளார். இந்த ஆடியோக்களை போலீசாரிடம் கொடுத்துள்ளார் செல்வானந்தத்தின் மனைவி முத்து பிரியா.
செல்வானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்ற நிலையில், அவரது தற்கொலைக்கு காரணமான தி.மு.க நிர்வாகிகளான மணிமாறன் மற்றும் முத்துக்குமாரை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்றும் செல்வானந்தம் உறவினர்களும் மற்றும் அ.தி.மு.க வினரும் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications