நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க! கூட்டத்துக்கு வந்தால் குலுக்கலில் பரிசு! அதிமுகவினரின் அடடே ஐடியா!
திருப்பூர்: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்காளர்களை கவர்வதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் கூட்டம் கலையக் கூடாது என்பதற்காக நூதன முயற்சியை எடுத்துள்ளனர் அதிமுகவினர். அதிமுக கூட்டம் முடியும் வரை மக்கள் கலைந்து செல்லாமல் இருக்க குலுக்கல் முறையில் தங்க நாணயம், கிரைண்டர், கேஸ் ஸ்டவ் உள்ளிட்டவை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்திருக்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இதை அடுத்து தமிழகத்தின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் திருவிழா தற்போதே துவங்கி விட்டது போல் உள்ளது.
திமுக தலைவர் முக ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டு நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டம்
மேலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த ஆண்டு முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் என பல்வேறு பெயர்களில் இந்த கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இவற்றிற்கு கூட்டம் திரட்டி வரும் வேலை அந்தந்த பகுதி செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளருக்கு தரப்பட்டு உள்ளது. அதிமுகவும் இதுபோல பல கூட்டங்களை நடத்திவரும் நிலையில் கூட்டம் கலையாமல் இருப்பதற்காக ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்திருக்கின்றனர் அதிமுகவினர்.
ஊத்துக்குளி பொதுக்கூட்டம்
ஊத்துக்குளி அருகே உள்ள முரட்டுபாளையத்தில் அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கேசி கருப்பணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களை கூட்டம் கலையாமல் இருப்பதற்காக அதிமுக நிர்வாகிகள் சார்பில் புதிதாக ஒரு யுக்தி கையாளப்பட்டது.
அதிமுக பரிசு மழை
குலுக்கல் முறையில் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தங்க நாணயம்,கிரைண்டர்,கேஸ் ஸ்டவ்,பேன், அயன் பாக்ஸ், ஹாட் பாக்ஸ், பீரோ என மொத்தம் 60 பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெற்ற மேடை முன்பு வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக கூட்டத்தில் சுமார் 1000 பொதுமக்கள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் வாக்களிப்பீர் இரட்டை இலை என்ற டோக்கன் வழங்கப்பட்டு அதற்கு பின் தனித்தனி எண்கள் எழுதப்பட்டிருந்தது.
அதிமுக யுக்தி
பொதுக்கூட்டம் முடிந்த பின்பு மூன்று சிறுமிகள் கொண்டு குலுக்கல் முறையில் எண்கள் வாசிக்க வாசிக்க அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுப் பொருட்கள் இல்லாதவர்களுக்கு தட்டு வழங்கப்பட்டது. பொதுவாக பெரிய அரசியல் கூட்டங்களில் தலைவர்கள் பேச தொடங்கியதும் கூட்டம் குறையத் தொடங்குவது வழக்கம். ஆனால் அதிமுகவின் இந்த புதிய யுக்தியால் பரிசு மழையால் கூட்டம் மாலை 6:00 மணி முதல்10 மணி வரை கலையாமல் அப்படியே இருந்தது. விழா ஆரம்பிக்கும் பொழுது அதிமுக கூட்டங்களில் பெரும்பாலும் எம்ஜிஆர் பாடல்களுக்கே நடன கலைஞர்கள் நடனம் ஆடுவது வழக்கம். ஆனால் இந்த கூட்டத்தில் மூன்று விஜயின் பாடலுக்கு நடன கலைஞர்கள் நடனம் ஆடியதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications