கனிமவளக் கொள்ளைக்கு ஒரு ‘காட்ஃபாதர்’.. அவர் பெயர் தான் ‘அப்பாவி’! யாரைச் சொல்கிறார் அன்புமணி ராமதாஸ்
திருப்பூர்: கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு தினசரி 800க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது, தென் மாவட்டங்களில் கனிமவள கொள்ளைக்கு காரணமான திமுக புள்ளியின் பெயர் 'அப்பாவி' என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அவர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசி கடை வீதியில் பொது கூட்டத்தில் பேசினார்.
அப்போது பேசிய அவர்," திருப்பூரை மாநகரம் என்று சொல்வதற்கே எனக்கு அசிங்கமாக உள்ளது. காரணம் எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதியும் இங்கு தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை. திருப்பூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட இந்த கொங்கு பகுதி மட்டும் இந்திய அந்நிய செலாவணியில் 73 ஆயிரம் கோடி ரூபாயை ஈட்டி கொடுக்கிறது.

அன்புமணி நடைபயணம்
திருப்பூர் மற்றும் 15000 கோடி அந்நிய செலாவனியை ஈட்டு கொடுக்கிறது. நொய்யல் ஆற்றை சென்று பார்த்தேன். திருப்பூரில் ஒரு சாக்கடை ஓடிக் கொண்டிருக்கிறது அதற்கு பெயர் தான் நொய்யல் ஆறு என்ற நிலை உருவாகிவிட்டது. 'நோய்களைப் போக்கும் ஆறு' அதுதான் நொய்யல் ஆறு. அப்படி இருந்த ஆற்றின் இன்றைய நிலை என்ன? சென்னையில் கூவம் ஆறு, மதுரையில் வைகை ஆறு என தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறும் செத்துக் கொண்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சி
தமிழ்நாட்டில் 25 லட்சம் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கின்றனர். இன்றைக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது கஞ்சா நாடு என்று மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால் எங்கு பார்த்தாலும் கஞ்சா இருக்கிறது. நகரம் கிராமம் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா கிடைக்கிறது. கனிம வள கடத்தலுக்கு துணையாக இருக்கிறார் முக்கிய புள்ளி. குறிப்பாக தென் மாவட்டங்களில் கனிம வள கொள்ளை நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக ஒரு 'காட்பாதர்' இருக்கிறார்.
கனிமவள கொள்ளை
கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு தினசரி 800க்கும் மேற்பட்ட லாரிகளில் கனிம வளம் கடத்தப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமானவர் ஒரு முக்கிய புள்ளி. அவர் பெயர் 'அப்பாவி'.. அவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ஏற்கனவே பல கட்சிகளில் இருந்தவர் தற்போது திமுகவில் இருக்கிறார். இந்த கனிமவளை கொள்ளையை ஏதாவது ஒரு அதிகாரி தடுத்து நிறுத்தினால் உடனே அவரை வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவார். விரைவில் சிபிஐ விசாரணை நடக்கும் 5-6 மாதங்களில் இவர்களெல்லாம் சிறைக்கு செல்வார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதியால் ஏற்படுகின்ற அடக்குமுறைகளை அழிக்க வேண்டும். அதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் மையக் கொள்கை. ஒருவர் உயர்ந்தவர் ஒருவர் தாழ்ந்தவர் என மனநிலையை போக்க வேண்டும். சினிமாவிலோ மேடையிலோ பேசுவதனால் சாதி ஒழிந்து விடாது. இந்த ஏற்றத்தாழ்வுகள் நீக்க வேண்டுமானால் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட அனைத்து சமுதாயத்திற்கும் நல்ல படிப்பும் வேலையும் கொடுக்க வேண்டும் அதற்கு கணக்கெடுப்பு அவசியம். தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்தால்தான் எந்தெந்த சாதிகள் பின்தங்கிய நிலையில் உள்ளன யார் யாருக்கு படிப்பு கிடைத்துள்ளது யாருக்கு படிப்பு கிடைக்கவில்லை? யாருக்கு வேலை கிடைக்கவில்லை என்ற உண்மை நிலை தெரிய வரும்" என்றார்.












Click it and Unblock the Notifications