நில அளவீடு.. விஏஓ டூ தாசில்தார்.. திருப்பூர் அரசு ஊழியருக்கு ஆயுசுக்கும் மறக்க முடியாத பாடம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நிலத்தை அளவீடு செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான போலீசார், ரசாயணம் தடவிய லஞ்சப்பணத்தை கொடுக்க வைத்து, ஊத்துக்குளி அருகே கிராமத்து விஏஓவை பொறிவைத்து பிடித்து கைது செய்தனர்.
விஏஓ, சர்வேயர், தாசில்தார், நகராட்சி கமிஷனர், வருவாய் அதிகாரி, மாநகராட்சி அதிகாரி, வனத்துறை அதிகாரி என எந்த அரசு துறைகளில் யார் உங்களிடம் லஞ்சம் கேட்டாலும் தருவதாக கூறிவிட்ட நேரடியாக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், அவர்கள் விசாரித்து ரெய்டுக்கு திட்டமிடுவார்கள். அவர்கள் அறிவுறுத்தலின்படி, ரசாயணம் தடவிய நோட்டுகளை கொண்டு சென்று உங்களிடம் லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரியிடம் கொடுக்க வேண்டும்.. அப்படி கொடுத்த உடன் அவர்கள் கைகளால் வாங்குவார்கள்.. அப்படி வாங்கியஅடுத்த நொடி மறைந்திருக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்வார்கள்.

லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக கைதாகும் அரசு ஊழியர் அன்றைக்கே பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை தாண்டி, அவருக்கு சஸ்பெண்ட் ஒரு காலக்கட்டத்தில் ரத்தானாலும், வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டே இருக்கும். அவர்கள் நீதிமன்றத்தில் ஒரு காலக்கட்டத்தில் தண்டனையும் கிடைக்கும். அதேபோல் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியரின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து, அவர் முறைகேடாக சேர்த்த சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்படும்.
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாகவே உள்ளது. எனவே லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதிக்கலாம் என்பதை விட்டு புகார் அளிக்க முன்வரவேண்டும். அண்மைக்காலங்களில் லஞ்ச போலீசில் மக்கள் லஞ்சத்திற்கு எதிராக புகார் அளிப்பது அதிகரித்துள்ளது. அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே ஒரு கிராம நிர்வாக அதிகாரி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா குன்னத்தூர் அருகே எடையபாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 45). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு சாமிநாதன், பழனிச்சாமி என்ற 2 சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 39 சென்ட் பூர்வீக நிலம் எடையபாளையம் கிராமத்தில் இருக்கிறது. இந்த நிலையில் 3 பேரும் அந்த நிலத்தை சரிசமமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர். இதற்காக நிலத்தை அளவீடு செய்ய எடையபாளையம் கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜனை அணுகி மனு அளித்துள்ளனர். ஆனால் அவர் பல மாதங்களாகியும் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறார்.
இது குறித்து முறையிட்டபோது, நிலத்தை விரைவாக அளவீடு செய்வதற்கு கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிலேகா மற்றும் பிரபாகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முருகேசனிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். அதனை அவர் குன்னத்தூர் பகுதியில் வைத்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கிராம நிர்வாக அதிகாரி வின்சென்ட் தியாகராஜனை லஞ்சப்பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை தடுக்க அரசு நினைத்தால் நிச்சயம் தடுக்க முடியும் என்றும் அதற்கு சேவை உரிமை சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. சில மாதம் முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் இதுபற்றி கூறும் போது, "தமிழகத்தில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல், திருமணப் பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள், மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை உள்ளிட்ட தமிழக அரசுத் துறைகளின் பணி ஆகும். ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அத்தியாவசியச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அடிப்படைச் சேவைகளை பெறுவதற்கு குறைந்தது ரூ.500 முதல் ரூ.10,000 வரை கையூட்டாக வழங்க வேண்டியிருப்பதாகவும், கையூட்டு கொடுத்தாலும் கூட குறித்த காலத்தில் சான்றிதழ்கள் கிடைப்பதில்லை என்றும் பொதுமக்கள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பொதுமக்களுக்குத் தேவையான பல சான்றிதழ்களை பொது சேவை மையம் மூலமாகவே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம்; அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லத் தேவையில்லை என்று அரசு விதிகள் கூறுகின்றன. ஆனால், பொது சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்தாலும் கூட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கையூட்டு தர வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். தமிழகத்தில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் அரசின் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் சட்டத்தில் வகை செய்யப்படும். அதனால், அரசு அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.
பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழகத்தில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது. ஆனால், தமிழக அரசு தான் இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது.." இவ்வாறு ராமதாஸ் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications