இதுதான் தமிழ்நாடு.. தேரோட்டத்தில் பக்தர்களுக்கு கேசரி வழங்கிய இஸ்லாமியர்.. அவிநாசியில் நெகிழ்ச்சி
திருப்பூர்: தமிழ்நாட்டில் மதுரை உள்பட பல மாவட்டங்களில் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பல இடங்களில் தேரோட்டம் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சித்திரை திருவிழா தேரோட்டத்தில் இஸ்லாமியர் ஒருவர் ஏராளமான பக்தர்களுக்கு கேசரி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் பல்வேறு மாவட்டங்களில் தற்போது சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின்போது பல கோவில்களில் தேர், சப்பரம் ஊரை பவனி வருவது முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

குறிப்பாக மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் இன்று பல்வேறு இடங்களில் தேரோட்டம் நடந்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலிலும் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 2வது நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதில் பக்தர்கள் பெரும் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
இந்த வேளையில் இஸ்லாமியர் ஒருவர் பக்தர்களின் பசியை போக்கும் வகையில் கேசரி தயாரித்து வழங்கினார். அதாவது வடக்கு ரத வீதியில் தேர் வலம் வந்தது. அப்போது காதர் மைதீன் என்பவர் பக்தர்களுக்கு கேசரி வழங்கினார். இதுபற்றி காதர் மைதீன் கூறுகையில், ‛‛நானும் எனது மனைவியும் தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி கேசரி வழங்கி பக்தர்களுக்கு வழங்கினோம். இது என்னால் முடிந்த சிறிய சேவையாகும்'' என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் தான் இவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். மதத்தின் பெயரில் பிரிவினை என்பது வேண்டாம். அனைவரும் மனிதர்களே என்பதை எடுத்து காட்டும் வகையில் மனிதநேயத்துக்கு எடுத்துக்காட்டாய் காதர் மைதீன் செயல்பட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பூர் அவிநாசியில் இன்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பக்தர்களுக்கு கேசரி தயாரித்து வழங்கிய காதர் மைதீன் இறைச்சி கடை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications