கொரோனா அச்சம்: திருப்பூரை ஒட்டுமொத்தமாக காலி செய்த வட இந்தியர்கள்- ரயில் நிலையத்தில் பெருங்கூட்டம்!
திருப்பூர்: கொரோனா அச்சம் காரணமாக திருப்பூரில் இருந்து ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் அலைமோதுகிறது.
கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மக்களின் பொது போக்குவரத்துகளான பேருந்துகள், ரயில் சேவைகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சொந்த வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் திருப்பூரில் பின்னலாடை தொழிற்சாலைகளில் பணிபுரியும் அண்டை மாநிலத்தவர் மற்றும் வட இந்தியர்கள் இன்று திடீரென சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். ஒரேநேரத்தில் திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தாக்குதலைத் தவிர்க்க சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் என்று அனைத்து தரப்பும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் திருப்பூரை சேர்ந்த வடஇந்தியர்கள் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் ஒரே நேரத்தில் சொந்த ஊருக்கு கிளம்பியதால் திருப்பூரில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, கோவை மற்றும் திருப்பூரில் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் குறிப்பாக இந்தி மொழி பேசும் வட இந்தியர்கள் குடியேறி உள்ளனர். இதனால் தமிழக அரசு பேருந்துகள் சில, இந்தி மொழி பெயர் பலகைகளுடன் இயக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications